Saturday 17 January 2015

புறநகர் ரயில் பயணச்சீட்டுகளை மொபைல் போன் மூலம் பெறும் வசதி: தெற்கு ரயில்வே அறிமுகம்

புறநகர் பயணச்சீட்டுகளை மொபைல் போன் மூலம் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை மொபைல் போன் மூலம் பெறு வதற்கான வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சாப்ட்வேரை ஆண்ட்ராய்டு, விண்டோஸ் போன்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக, ‘ஆர்-வேலட்’ என்ற கணக்கு தொடங்கப்படும். தற்போது, சென்னை கடற்கரை, எழும்பூர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் இருந்து பயணத்தை தொடங்குபவர்கள் மட்டுமே இப்புதிய சேவையின் மூலம் பயணச்சீட்டுகளை பெற முடியும்.
பயணிகள் தங்களுக்கு தேவையான பயணச்சீட்டுகளை ‘ஆர்-வேலட்’ என்ற கணக்கின் மூலம் முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், மேற்கண்ட ரயில் நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தில் தாங்கள் பதிவு செய்த பயணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவற்றை பயணத்தின் போது உடன் கொண்டு செல்ல வேண்டும்.
இதுகுறித்த கூடுதல் தகவல்களை www.indianrail.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது 9840931998 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.