Monday 19 May 2014

குளத்துடன் அமைந்த தேவாலயம்

வில்லியனூர் மாதா திருத்தலம் பாண்டிச்சேரியில் இருந்து மேற்கே விழுப்புரம் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வில்லியனூர் திருக்காமீஸ்வரர் சிவபெருமான் ஆலயத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது
புதுச்சேரியில் அப்போதிருந்த மறைபோதக சபையினர் வில்லியனூரில் ஆலயம் அமைக்க வேண்டி சிறு நிலத்தினை 1867ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினர். இந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்ததால், திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

புதுவையைச் சேர்ந்த மருத்துவரான லெப்பீன் துரை, தனது குழந்தைக்கு ஏற்பட்ட கொடிய நோயை நீக்கி, மேரி மாதா உயிர்ப் பிச்சை அளித்தாக நம்பினார். எனவே, அவர், கோயில் கட்டுவதற்குப் பொருளுதவி செய்தார். இதனைப் பெற்றுக்கொண்ட அப்போதைய மறைபோதக சபையினர் வில்வநல்லூர் என்றழைக்கப்பட்ட வில்லியனூரில் மேரி மாதாவுக்காக தேவாலயம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கினர்.

1858ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில், மசபியேல் என்ற குகையில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு மேரி மாதா காட்சி கொடுத்தார். அதன் நினைவாக, லூர்துநகரில், தேவாலயம் கட்டப்பட்டது. அங்கு வீற்றிருக்கும் அன்னை மேரி, லூர்து மாதா என்று அழைக்கப்படுகிறார்.
எனவே, லூர்து மாதா பெயரில் வில்லியனூரில் தேவாலயம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பெர்னதெத்தின் உறவினரான தார்ப்ஸ் அடிகளார் இங்கு பணியாற்றிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1877, ஏப்ரல் 4 அன்று ஆலயத்தின் கட்டுமான வேலைகள் முடிவடைவதற்கு முன்பாகவே பிரான்ஸ் நாட்டில் இருந்து பெரிய பெட்டியில் லூர்து அன்னையின் சொரூபம் கப்பல் மூலமாகப் புதுச்சேரிக்குக் கொண்டுவரப்பட்டது. கப்பலில் இருந்து அந்தச் சொரூபத்தை இறக்கியபோது, அது மூன்று முறை கீழே விழுந்தது. எனினும், மாதா சொரூபத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது இன்று வரை பெரும் அதிசயமாகவே கருதப்படுகிறது.

1877, ஏப்ரல் 7 அன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு ராணுவ இசைக் கருவிகள் முழங்க, வாண வெடிகள் அதிர, பவனியாக வில்லியனூருக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம் கிறிஸ்தவர்கள் தேவ அன்னைக்கு பிரமாண்டமாய் வரவேற்பளித்துத் தங்கள் உற்சாகத்தினை வெளிப்படுத்தினர்.
தற்பொது அருமார்த்தபுரம் என்றழைக்கப்படும் அருமார்த்த பிள்ளைச்சாவடியிலிருந்து சுல்தான்பேட்டை வழியாக வில்லியனூருக்கு தேவ அன்னையின் சொரூபம் கொண்டு செல்லப்படவிருந்தது. ஒரு சிலர் இதை எதிர்த்ததன் காரணமாக இரு தரப்பினரிடையே கலகம் வெடித்தது. அப்போது தேவ அன்னையின் சொரூபம் தானாகத் திரும்பி வேறு வழியைக் காட்டியது என்று பக்தர்கள் கூறிப்பிடுகிறார்கள்.

தற்போது வி. மணவெளி என்றழைக்கப் படும் பகுதி அப்போது குறுகிய பாதையாக இருந்தபோதிலும் அவ்வழியாக மாதா சொரூபம் பவனியாக கொண்டு செல்லப்பட்டு, கணுவாப்பேட்டை என்ற இடத்தில் பக்தர்களின் பார்வைக்காகப் பந்தலில் வைக்கப்பட்டிருந்தது. இதற்குப் பின்னர், ஆலயத்தின் பீடத்தில் அருட்தந்தை குய்யோன் தாவீது நாதர் அவர்களால் தேவ அன்னையின் சொரூபம் தூக்கி நிலைநிறுத்தபட்டது.

1877, ஏப்ரல் 8 அன்று புதுச்சேரியின் பேராயர் மேதகு லெவணான் ஆண்டகை அவர்கள் திருமுறை ஒழுக்கங்களை நிறைவேற்ற, லூர்து அன்னையின் சொரூபத்தை அர்ச்சித்து கெபியில் அரியணையேற்றினார்.

1885ஆம் ஆண்டு பேராயர் லெவணான் ஆண்டகை ரோமாபுரி சென்றபோது, அப்போதிருந்த போப்பாண்டவர் 13ஆம் சிங்கராயரிடம் வில்லியனூரில் நடைபெறும் அற்புத அதிசயங்களை எடுத்துச் சொல்லி வில்லியனூர் புனித லூர்தன்னைக்கு முடிசூட்ட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து வில்லியனூரில் உள்ள லூர்து அன்னை சொரூபத்திற்கு முடிசூட்டுவதற்கான உத்தரவினை 1886ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி போப்பாண்டவர் 13ஆம் சிங்கராயர் வழங்கினார். அதன்படி, வில்லியனூர் லூர்தன்னைக்கு சொரூபத்திற்கு முடி சூட்டப்பட்டதுடன், ஆலயம் திருத்தலமாகவும் உயர்த்தப்பட்டது.

ஆசியக் கண்டத்திலேயே சில சொரூபங்கள்தான் போப்பாண்டவரின் பெயரில் முடிசூட்டப்பட்டுள்ளன. அவற்றில் வில்லியனூரில் அமைந்துள்ள புனித லூர்தன்னை சொரூபமும் ஒன்று.

ஆசியாவிலேயே, குளத்துடன் அமைந்துள்ள தேவாலயம், வில்லியனூரில் மட்டும்தான் உள்ளது. ஆரம்ப காலத்தில், கற்களால் கட்டப்பட்டிருந்த இந்தக் குளத்தின் கரைகள், 1923ஆம் ஆண்டில், செங்கற்களால் கட்டப்பட்டன. 1924ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் இருந்து லூர்து அன்னையின் சொரூபம் வரவழைக்கப்பட்டு குளத்தின் மையப் பகுதியில் உள்ள தூண் மீது வைக்கப்பட்டது.
ஆசியாவிலேயே, குளத்துடன் அமைந்துள்ள தேவாலயம், வில்லியனூரில் மட்டும்தான் உள்ளது. ஆரம்ப காலத்தில், கற்களால் கட்டப்பட்டிருந்த இந்தக் குளத்தின் கரைகள், 1923ஆம் ஆண்டில், செங்கற்களால் கட்டப்பட்டன. 1924ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் இருந்து லூர்து அன்னையின் சொரூபம் வரவழைக்கப்பட்டு குளத்தின் மையப் பகுதியில் உள்ள தூண் மீது வைக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில், லூர்து நகரில் மாதா காட்சி கொடுத்தபோது, அங்குள்ள சுனையில் உற்பத்தியான புனித நீர் இந்தக் குளத்தில் ஆண்டுதோறும் கலக்கப்படுகிறது.

வில்லியனூர் புனித லூர்தன்னை திருத்தலத்தின் சிறப்பாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் புதுவையில் இருந்து பாதயாத்திரை நடத்தப்படுகிறது. 1977ஆம் ஆண்டு புயலினால் புதுவைக்கு மாபெரும் பேரழிவு ஏற்படுமென்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தபோது, அப்போதிருந்த பேராயர் வெண்மணி செல்வநாதர் ஆண்டகை, புயலில் இருந்து புதுவையைக் காப்பாற்ற தேவ அன்னையிடம் ஜெபிக்கும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

புயலில் இருந்து காப்பாற்றப்பட்டால் வில்லியனூருக்குப் பாதயாத்திரையாக வந்து நன்றி செலுத்துவோம் என்றும் வாக்குக் கொடுத்தார். இதனால் புதுவையைத் தாக்கவிருந்த புயல் வேறு இடம் நகர்ந்ததாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதையடுத்து, 1977ஆம் ஆண்டு முதல் பாதயாத்திரை தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.

வீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே மங்கலம் பேட்டையை அடுத்து அமைந்துள்ளது கோணான் குப்பம் என்கிற சிறிய கிராமம். இந்த கிராமத்தில்தான், கிறிஸ்தவ மதத் துறவியான வீரமாமுனிவர், முதன் முதலாகக் கட்டிய தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கு வீற்றிருக்கும் மேரி மாதா, புடவையும், நகைகளும் அணிந்திருப்பார். இந்த மேரி மாதாவுக்குப் பெரியநாயகி அன்னை என்று பெயர். வீரமாமுனிவர் வரைந்த ஓவியத்தின் அடிப்படையில் இந்த சொரூபம் உருவாக்கப்பட்டது.

இந்த தேவாலயம் கட்டப்பட்டதன் பின்னணியில் சுவாரசியமான கதை ஒன்று உண்டு. ஆரியனூர் என்று அழைக்கப்படும் கோணான்குப்பம் முன் காலத்தில் சிறிய காடாக இருந்தது. மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது அங்குள்ளவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. அச்சமயத்தில், இந்தியா வந்திருந்த வீரமாமுனிவர், தமிழ்நாட்டில் தங்கியிருந்தார். ஒரு சமயம் ஆரியனூர் காட்டு வழியாக கால்நடையாக நடந்து போன அவர், ஒரு மரத்தடியில படுத்து ஓய்வெடுத்தார். அப்போது, அவர் வைத்திருந்த மாதா சொரூபங்களில் ஒன்று காணாமல் போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால், சோகத்துடன் அங்கிருந்து புறப்பட்டார்.
வழியில், அந்தக் காட்டுக்குச் சொந்தக்காரான கச்சிராயர் என்ற பாளையக்கார ஜமீனை மரியாதை நிமித்தமாக வீரமாமுனிவர் சந்தித்துப் பேசினார். அப்போது, தன்னிட மிருந்த மாதா சொரூபங்களில் ஒன்று காணாமல் போனதை அவரிடம் கூறிவிட்டுப் புறப்பட்டுப் போகிறார்.

ஒருநாள், பாளையக்காரர் கனவில் தோன்றிய மேரி மாதா, தான் காட்டில் மறைந்திருப்பதாகச் சொல்கிறார். அடுத்த நாள், பாளையக்காரர், வேலையாட்களுடன் போய் காடு முழுக்கத் தேடி, வீரமாமுனிவரிடமிருந்து தொலைந்த மாதா சொரூபத்தைக் கண்டுபிடிக்கிறார். பின்னர், அந்தப் பகுதியிலேயே சிறியதாக ஆலயம் ஒன்றைக் கட்டி, மேரி மாதா சொரூபத்தை வைத்து வழிபடத் தொடங்குகிறார்.

அந்த நேரத்தில், நீண்ட காலம் வாரிசு இல்லாமல் இருந்து அவருக்குக் குழந்தை
பாக்கியம் உண்டாகிறது. இத்தகவல் அப்பகுதி முழுவதும் பரவி, பொதுமக்கள் அந்தச் சிறிய ஆலயத்துக்கு வரத் தொடங்கினார்கள்.

மற்றொரு முறை அதே வழியாக வந்த வீரமாமுனிவர், அங்கே ஒரு சிறிய ஆலயம் இருப்பதையும், அதில், தன்னிடம் தொலைந்து போன மாதாவின் திருச்சிலை இருப்பதையும் பார்த்து ஆச்சரியப்படுகிறார். பின்னர், அந்தப் பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் இப்போது இருக்கும் தேவாலயத்தைக் கட்டி, மேரி மாதாவின் சொரூபத்தை வைக்கிறார். மேரி மாதாவுக்குப் புடவை, நகைகள் அணிவித்து, தான் வரைந்த ஓவியத்தின் அடிப்படையில், மரத்தால் ஆன சிலை உருவாக்கப்பட்டு, அதற்குப் பெரியநாயகி அன்னை என்று பெயரிட்டார்.

அந்தச் சிலை இப்போதும் அங்கே காட்சி தருகிறது. போர்ச்சுக்கீசிய பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாயத்தின் சுவர் சுமார் 3 அடி கனம் கொண்டது. ஒரே நேரத்தில், 50 பேர் மட்டுமே இங்கு அமர்ந்து வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். வீரமாமுனிவர், இந்தியாவில் சில பகுதிகளில் தேவாலயங்களைக் கட்டியிருந்தாலும், இது அவரால் கட்டப்பட்ட முதல் தேவாலயம் என்பதால், அதன் பழமையோடு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தெரியுமா உங்களுக்கு?


* கேன்வாஸ் துணி தயாரிக்கப் பயன்படும் சணல் "ஹெம்ப்' என்ற தாவரத்திலிருந்து கிடைக்கிறது.
 
* "இந்தியாவின் நறுமணத்தோட்டம்' என்று அழைக்கப்படும் மாநிலம் கேரளா.
 
 பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சலைத் தருவது ஆரஞ்சு.

* மாலுமிகளுக்கான திசை காட்டும் கருவியைக் கண்டுபிடித்தவர்கள், சீனர்கள்.
 
* உலகிலேயே மிகப் பெரிய பூ பூக்கும் தாவரம், ராஃப்லேசியா. இதன் பூவின் விட்டம் 1 மீட்டர்.
 
 சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில், ஐந்து (புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி) கோள்களை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடியும்.

கோழித் தூக்கம் வேண்டாம்

மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தைத் தூங்குவதில் செலவிடுகின்றனர். அதாவது சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது.
ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம். இது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் தூக்கம் மிக அவசியமாகிறது. உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்குப் போதுமான முக்கியத்துவம் அளிக்கும் நாம் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை.
தூங்குகிறேன் என்ற பெயரில் கோழித் தூக்கம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். முறையான தூக்கம் இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் தோன்றும். இந்தப் பரபரப்பில் நல்ல தூக்கத்திற்கு எங்கு நேரம் இருக்கிறது எனச் சொல்வதும் சரிதான் ஆனால் ஒரு நாளில் குறைந்தது ஐந்து மணி நேரமாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும். காலையில் எழும்போது சுறுசுறுப்பை உணர்ந்தால் அதுவே சரியான அளவு தூக்கம்.
இந்தப் பரபரப்பில் நல்ல தூக்கத்திற்கு எங்கு நேரம் இருக்கிறது எனச் சொல்வதும் சரிதான் ஆனால் ஒரு நாளில் குறைந்தது ஐந்து மணி நேரமாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும். காலையில் எழும்போது சுறுசுறுப்பை உணர்ந்தால் அதுவே சரியான அளவு தூக்கம்.
மற்றவர்களுடன் நட்புடன் பழகுவது சிறந்தது. அதே நேரத்தில் உங்களுக்கு நீங்களே நண்பனாக நடந்து கொள்வது சாலச்சிறந்தது - ஹோனோர்
 1. இன்பத்தை இரட்டித்து, துன்பத்தை பாதியாகக்  குறைப்பது நட்பு - பிரான்சிஸ் பேகன்
 

2. நட்பு கடவுள் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள  வரங்களில் தலைசிறந்தது  - பெஞ்சமின் டிஸ்ரேலி
 

3. நட்பைக் கொடுத்துதான் நட்பைப் பெறமுடியும்  - தாமஸ் வில்லியம்
 

4. பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை, மனிதனுக்கு நட்பு - வில்லியம் பிளேக்
 

5. எதிரியின் முத்தங்களைவிட, நண்பனின் அடிகள்  சிறந்தவை. - தாமஸ் ஏ. பெக்கட்
 

6. ஒரு நண்பனுடன் உரையாடுவது, உரக்க சிந்திப்பதற்குச் சமம் - ஜோசப் அடிசன்
 

7. உன் உறவினரைத் தேர்ந்தெடுப்பது ஊழ்வினை,  நண்பனைத் தேர்ந்தெடுப்பது நீயே - ஜேக் டெலீர்

8. மற்றவர்களுடன் நட்புடன் பழகுவது சிறந்தது. அதே நேரத்தில் உங்களுக்கு நீங்களே நண்பனாக நடந்து
 கொள்வது சாலச்சிறந்தது - ஹோனோர்


9. கண்ணீரைத் துடைப்பவன் நமது வாழ்வின் உற்ற  நண்பனன்று, நாம் கண்ணீர் விடாமல் பார்த்துக்
 கொள்பவனே உற்ற நண்பன் - எஃப்டி
 

10. நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது. ஆனால் உயிரைக் கொடுப்பதற்குத் தகுதியான நண்பன் கிடைப்பது அரிது - கதே

முத்துக் கதை 2

அன்பை அடையும் வழி!
 ஒரு முனிவரிடம், ஒரு பெண் வந்து தன் கணவன், கொஞ்ச நாட்களாகத் தன்னிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என்று கூறி அதைச் சரிசெய்ய மருந்து ஏதாவது தரும்படி கேட்டுக் கொண்டாள்.
 முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அப்படி ஒரு மருந்து தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

 மறுநாளே அப்பெண் காட்டுக்குச் சென்றாள். ஒரு புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்துபோய் வீடு திரும்பி விட்டாள். மறுநாளும் காட்டுக்குச் சென்றாள். அதே புலியைக் கண்டாள். அப்போதும் உறுமியது. ஆனால் அன்று பயம் சற்றுக் குறைவாக இருந்தது.
 ஆனாலும் திரும்பி விட்டாள்.
 அவள் தினந்தோறும் காட்டுக்குள் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்துவிட்டது. ஒருநாள் புலியின் ஒரு முடியை எடுக்கவும் முடிந்தது.
 அந்தப் புலியின் முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டுவிட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.
 முனிவர் அவளைப் பார்த்து, ""இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படிப் பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?'' என்று கேட்டார்.
 முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது. மனத்தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.


Saturday 17 May 2014

முத்துக்கதை

பயம்

காட்டில் இளைஞன் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசித்தது. ஒரு மரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைப் பார்த்தான். உடனே வேகமாக மரத்தில் ஏறி, அதை ஆசையாகப் பறித்துத் தின்றான். பசி அடங்கவில்லை. கிளையின் நுனியில் இன்னும் சில பழங்கள் இருந்தன.
 அதைப் பறிக்க நுனிக்குச் சென்றான். பாரம் தாங்காமல், கிளை முறிந்தது. அவன் கீழே விழும் சூழல் உருவானபோது, சட்டென்று சுதாரித்து வேறொரு கிளை தாவிப் பிடித்து, அதில் தொங்கினான்.
 தரை வெகு கீழே இருந்ததால், குதிக்கவும் முடியாமல், மேலே ஏறவும் முடியாமல் அந்தரத்தில் அவன் தொங்கிக் கொண்டிருந்தான். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டான்.
 அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர், மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தார். கீழே குனிந்து ஒரு சிறு கல்லை எடுத்து அவன் மீது எறிந்தார். இளைஞனுக்குக் கோபம் வந்துவிட்டது.
 காப்பாற்றச் சொன்னால், கல்லால் அடிக்கிறீர்களே என்றான். முதியவர் பதில் பேசாமல், மற்றொரு கல்லை எடுத்து எறிந்தார். வலி தாங்காத இளைஞன், பெரும் முயற்சி செய்து, மற்றொரு கிளையை தாவிப் பிடித்துக்கொண்டு, கீழே வந்தால், உம்மை சும்மாவிட மாட்டேன் என்று எச்சரித்தான்.
 அதைக் காதில் வாங்காமல், பெரியவர் மேலும் ஒரு கல்லை எடுத்து எறிந்தார். இளைஞன், மீண்டும் முயற்சி செய்து, மற்றொரு கிளை மீது கால் வைத்து, மரத்தில் ஏறிவிட்டான். பின்னர், வேகமாக கீழே இறங்கி வந்து, ""உதவி கேட்டால், கல்லால் அடிக்கிறீரே, பைத்தியமா நீர்'' என்று பெரியவரை சரமாரியாகத் திட்டித் தீர்த்தான்.
 பெரியவர், ""தம்பி நான் உனக்கு உதவிதானே செய்தேன்'' என்றார். எப்படி என்றான் இளைஞன் குழப்பத்துடன். ""மரத்தில் நீ தொங்கிக் கொண்டிருந்தபோது, பயத்தால், நீ உறைந்துபோய் இருந்தாய். அதனால், உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை உன் மீது எறிந்தபோது, உன் பயம் மறைந்து, என்னை எப்படி பிடிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினாய். அதனால், பெரும் முயற்சி செய்து, யாருடைய உதவியும் இல்லாமலேயே நீ கீழே இறங்கிவிட்டாய். பயத்திலிருந்து உன்னைத் திசைதிருப்பி, நீ கீழே இறங்க உதவியிருக்கிறேனே'' என்றார்.
 இளைஞன் வெட்கித் தலைகுனிந்தான்.

ஜி.ஆரோக்கியதாஸ், சென்னை.