Sunday 10 September 2017

தரமான நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பது எப்படி?

டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட காய்ச்சல்களை தீர்க்க கிடைத்த அரிய வரப்பிரசாதமான நிலவேம்புக் குடிநீர் சரியாகவும் தரமாகவும் இல்லாவிட்டால் அதன் பலன் முழுமையாகக் கிடைக்காது. தரமான நிலவேம்பு குடிநீரில் உள்ள மூலப் பொருட்கள் என்ன, அதை எப்படி தயாரிப்பது தெரியுமா?

மூலப்பொருள்கள்
நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகை தாவரம்),  பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு,  மிளகு ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகும்.
மருத்துவக் குணங்கள்
இந்த ஒன்பது மூலப்பொருள்களில் நோய் தீர்ப்பதில் நிலவேம்புக்குத்தான் முக்கியப் பங்கு உள்ளது.  இதனால்தான் இதை நிலவேம்புக் குடிநீர் என்கிறோம். இதில் உள்ள வேதிப்பொருள்கள் காய்ச்சல் தீர்ப்பதுடன் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் தன்மையையும் கொண்டது. 
கோரைக்கிழங்கு , பற்படாகம் ஆகியவை காய்ச்சல் தீர்க்கும் சிறந்த மருந்தாகும். பேய்ப்புடல் குடலில் தங்கியுள்ள மாசுக்களை வெளியேற்றும். சுக்கு, மிளகு ஆகியவை உடலின் நொதிகள் மற்றும் என்சைம்களின் சுரப்பைச் சீராக்கும்
வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம் ஆகியவை உடல் ஜுரத்தால் ஏற்படும்  சூட்டைத் தணிக்கும். சுக்கு, மிளகு ஆகியவை உடல் சூட்டை அதிகரிக்கும் இயல்பு உடையது. ஆனால், வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம்  ஆகியவை இந்த சூட்டைத் தணித்து சமநிலையில் பராமரிக்க உதவுகிறது

தயாரிக்கும் முறை
இந்த மூலப்பொருள்கள் ஒவ்வொன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தில் கஷாயம் தயாரிக்கும்போதும் தயாரிக்கக்கூடிய மூலப்பொருள்களின் தன்மை மற்றும் தரத்தைப் பொறுத்து, அதனுடன் நான்கு அல்லது எட்டு அல்லது 16 மடங்கு என அதனுடன் தண்ணீர் சேர்க்கப்படும். 
அதன்படி நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுடன் 8 மடங்கு தண்ணீர் சேர்த்து,  அதை 4 மடங்காக வற்றும்வரை கொதிக்க வைக்கவேண்டும். பின்னர்  ஆற வைத்து வடிகட்டினால் நிலவேம்புக் குடிநீர் தயார். 
எப்படிக் குடிக்க வேண்டும்?
நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாக குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும். நேரம் செல்லச் செல்ல, அதன் வீரியம் குறைந்து விடும். அதேபோல,   முதல் நாள் தயார் செய்த நிலவேம்புக் குடிநீரை,  அடுத்த நாள்வரை  வைத்துக் கண்டிப்பாகக் குடிக்கக் கூடாது.குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தும் பயன்படுத்தக்கூடாது. 
எப்போது, எவ்வளவு  குடிக்கலாம்?
நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு  10 மி.லி முதல் 50 மி.லி வரை அருந்தலாம். இதில் குழந்தைகள் 10 மி.லி சிறுவர்கள் 15 மி.லி பெரியவர்கள் 15-ல் இருந்து 50 மி.லி வரை குடிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு மூன்று தடவை குடிக்கலாம்.
நிலவேம்புக் குடிநீரை, எப்போதும் சாப்பாட்டுக்கு முன் குடிப்பதுதான் சிறந்தது. அப்போதுதான். அதை முழுமையாக உடல் உட்கிரகித்துக் கொள்ளும்.

.