Wednesday 14 November 2012

அக்கம் பக்கம்


எனக்கு 23, உனக்கு 70 


கேரள மாநிலம் திருவனந்தபுரம் போத்தன்காடு பகுதியைச் சேர்ந்த 23 வயது ஒரு பொண்ணுக்கு, ஓரு வருஷத்துக்கு முன்னாடி, கண்ணூர் பகுதியைச் சேர்ந்த, அம்சாங்கறவரு, மொபைல் போன் மூலம் அறிமுகமானாரு. . எம்.டெக்., பட்டதாரியான, அந்த பொண்ணும், அம்சாவும், அடிக்கடி போன்ல பேசிக்கிட்டாங்களாம். வழக்கம் போல ரெண்டு பேருக்கும் காதல் வந்திருச்சி. அப்புறம் என்னா.. ஒரு வருஷமா, ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்காமலேயே, 'காலமெல்லாம் காதல் வாழ்க' படம் மாதிரி போன்லயே காதலிச்சிட்டிருந்தாங்களாம். திடீர்னு ஒருநாள், அந்த பொண்ணுக்கு தன்னோட காதலன் அம்சாவை நேர்ல பாக்கணும் ஆசை. உடனே, போன ஒம்பதாம் தேதி திடுதிப்புன்னு கிளம்பி கண்ணூர் கூத்துப்பரம்பு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடுச்சி. 

அங்கேயிருந்து தன்னோட காதலனுக்கு பலமுறை போன் செஞ்சுதாம். ஆனா.. என்னமோ தெரியலை காதலன் போனை எடுக்கலை. என்ன பண்றதுன்னு தெரியாம.. பஸ் ஸ்டாண்டுலயே அந்த பொண்ணு சுத்திக்கிட்டிருந்திருக்கு. இத பாத்து, அங்க இருந்தவங்க போலீசுக்கு சொல்ல, போலீஸ்காரங்க வந்து, அந்த பொண்ணை ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விசாரிச்சிருக்காங்க. பொண்ணு விஷயத்தைச் சொன்னதும், காதலன் அம்சா போன் நெம்பரை வாங்கி..போன் பண்ணி அவனை வரச் சொன்னாங்க. பொண்ணு முதல் முதலா தன்னோட காதலனை பாக்கறதுக்கு ஆவலோட காத்திருக்க, வந்தவனை, ஸாரி வந்தவரை பார்த்ததும் பயங்கர அதிர்ச்சியாகி, மயக்கம் போட்டு விழுந்திருச்சி. 

வந்தவருக்கு வயசு 70 வயசு. அவரோட உண்மையான பேரு இப்ராகிம். அவருதான், அந்த பொண்ணுக்கிட்ட அம்சான்ற பேர்ல பேசிக்கிட்டிருந்தவராம். அப்புறம், என்ன போலீஸ்காரங்க பொண்ணுக்கு மயக்கம் தெளிய வெச்சி, புத்திமத்தி சொல்லியிருக்காங்க. அப்புறம், 'தனக்க இளம் வயசுன்னு சொல்லி, போன்ல காதலிச்சு ஏமாத்துன இப்ராகிம் மேல அந்த பொண்ணு புகார் குடுத்திருக்கு.  

இதுல இன்னொரு விசேஷம் என்னன்னா, அந்த பொண்ணுக்கு சொந்தமா மொபைல் போனே கிடையாதாம். இப்ராகிம் ஒரு தடவை கூட அந்த பொண்ணுக்கு தானா போன் பண்ணதில்லையாம். இந்த பொண்ணுதான், லேண்ட் லைன்லேர்ந்து அடிக்கடி போன் பண்ணி காதலை உரம் போட்டு வளர்த்திருக்கு. அப்புறம் போலீஸ்காரங்க.. பொண்ணோட சொந்தக்காரங்ககிட்ட பொண்ணை ஒப்படைச்சிருக்காங்க. 

கலி முத்திடுத்து.. 


ரெண்டாம் இடம்..

சமூக கட்டமைப்பு இல்லாதது, கலாசார சீரழிவு, பணிச்சுமை, மன உளைச்சல், போதைக்கு அடிமையாகறது போன்ற காரணங்களால தங்களை தாங்களே மாய்ச்சிக்கற சம்பவங்கள் நாட்ல அதிகரிச்சிக்கிட்டே வருது. தேசிய குற்றப்பதிவேடுகள் துறையின் அறிக்கைப்படி, இந்திய அளவுல, தற்கொலைகள் அதிகரிசிருக்கறதில மேற்குவங்க மாநிலத்துக்கு அடுத்தபடியா, ரெண்டாவது இடத்துல தமிழகம் இருக்காம்.

மேற்குவங்கத்தில் வறுமை காரணமாக ஆண்டுக்கு 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்துக்கறாங்களாம். இது தமிழகத்தில, ஆண்டுக்கு 15 ஆயிரத்து 963 பேராம். இதுல, கடன் தொல்லையால 2.2 சதவீதம் பேரும், போதை பழக்கத்தால 2.4 சதவீதம் பேரும், காதல் தோல்வியால 3.55 சதவீதம் பேரும், நோய் பிரச்னைகளால 19.6 சதவீதம் பேரும், குடும்ப சண்டை காரணமாக 24.3 சதவீதம் தற்கொலை செஞ்சுக்கிறாங்களாம். 

தமிழக அளவில், திருப்பூர் மாவட்டத்தில அதிகம் பேர் தற்கொலை செஞ்சிக்கிறாங்களாம். பனியன் தொழில் வளர்ச்சி காரணமாக, உலக அளவில் தனி இடத்தை பெற்றுள்ள திருப்பூர், பல்வேறு மாவட்ட மற்றும் மாநில மக்களுக்கு, படிச்சவர், படிக்காதவர்ங்கற பாரபட்சமில்லாம வேலை வாய்ப்பு தரும் நகரமாக இருக்கு. ஆனா.. குடும்பங்கள் சீரழிவு காரணமா இங்க 80 சதவீத தற்கொலை சம்பவங்கள் நடக்குதாம். இந்த மாவட்டத்துல மாவ கடந்த 2009 ம் ஆண்டு 871 பேரும்; 2010ல், 940 பேரும்; 2011ல், 859 பேரும், 2012ல், கடந்த அக்., வரை, 511 பேரும் தற்கொலை செய்துக்கிட்டிருக்காங்களாம். அதாவது சராசரியா இங்க தினமும் 
மூணு பேர் தற்கொலை செய்துக்கறதும், 60 பேர் வரை தற்கொலைக்கு முயற்சி பண்றதும் சர்வ சாதாரணமாக நடந்துட்டிருக்காம். அதுவுமில்லாம ஆண்டுக்கு 400 பேர் வரை காணாம போறதாவும் போலீசில் புகார்கள் பதிவாகுதாம். 

இது இனிப்பான செய்தி இல்ல


இன்னிக்கு உலக நீரழிவு நோய் தினம். மனித உடல்ல இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகள்ல குறை ஏற்பட்டுதுன்னா.. ரத்தத்தில சர்க்கரையோட அளவு அதிகரிக்குது. இதனால, உணவிலிருந்து சக்தியை எடுக்க முடியாம ஏற்படறதே நீரிழிவு நோய். இந்த நோய்க்கான 'இன்சுலின்' அப்படிங்கற மருந்தை, சார்லஜ் ஹெர்பர்ட் பெஸ்ட் என்பவரோட சேர்ந்து, கனடாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் "பிரெட்ரிக் பேண்டிங்கை' கவுரப்படுத்தற விதமாக, அவரது பிறந்த நாளான இன்னிக்கு (நவ., 14) உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அறிவிச்சது. இதோட மையக்கருத்து, 2009 - 2013 வரை, 'நீரழிவு நோய் கல்வி மற்றும் அதை தடுப்பதுங்கறதுதான். 

இந்த நோயில, ரெண்டு வகை இருக்கு. இன்சுலின் சுத்தமா சுரக்காம நிக்கிறது முதல் வகை. இது குழந்தைகளை அதிகம் பாதிக்கிது. இரண்டாவது வகை, இன்சுலின் போதிய அளவுல சுரக்காம இருக்கறது. இவ்வகை தான் 90 சதவீத நீரழிவு நோயாளிகளுக்கு இருக்கு. இந்த வகையால 45 வயசுக்கும் மேற்பட்டவங்க. அதிகம் பாதிக்கப்படறாங்க.

இன்னிய தேதில, உலகம் முழுசும் 34 கோடி பேர் நீரிழிவு நோயால  பாதிக்கப்பட்டிருக்காங்க. 2030ம் ஆண்டுல இது ரெண்டு மடங்கா அதிகருக்கும்னு உலக சுகாதார நிறுவனம் பீதிய கிளப்பியிருக்கு. நீரிழிவு நோயால இறக்கறவங்கள்ல 80 சதவீதம் பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை சேர்ந்தவங்களாம். இந்தியாவில மட்டும், ஐந்து கோடிக்கும் அதிகமானவங்க பாதிக்கப்பட்டிருக்காங்களாம். இன்னும் சில ஆண்டுகள்ல இது, 7 கோடியாக உயருமாம். 


ஒரு முறை வந்துட்டா.. வாழ்நாள் முழுசும் தொடர்ந்திட்டிருக்கற இந்த நோய், சமீப காலமா குழந்தைகள் பக்கம் தன்னோட பார்வையை திருப்பியிருக்காம். அதனால, பெற்றோர்கள் கவனமா இருங்க. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கறதோ, குறையறதோ கூட ஆபத்தில் முடியலாம். அதனால மருத்துவ பராமரிப்பும், அலோசனையுடன் கூடிய உணவுக் கட்டுப்பாடு அவசியம். அதிக உணவு, குறைவான வேலைன்னு இருக்கக் கூடாது. நல்லா உடல் பயிற்சியும், முறையான உணவு பழக்க வழக்கமும் இருந்த இந்த நோய் பக்கத்துல வர்றதுக்கு அஞ்சும். 

எடை அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை இதுக்கான பொதுவான அறிகுறிகள். துவக்கத்திலேயே சிகிச்சை எடுக்கத் தவறினா கண், இருதயம், சிறுநீரகம், கால் ஆகியவற்றை பாதிப்படையும். 


அங்கீகாரம். 

என்னதான் இலவம் பஞ்சு மெத்தையில படுத்தாலும், பாய்ல படுத்து தூங்கற சுகத்துக்கு அது ஈடாகாது. நாகரீகம் மற்றும் அறிவியல் வளர்ச்சியால பல பொருட்கள் வழக்கொழிஞ்சி போனாலும், பாய் இன்னும் மக்களோட பயன்பாட்டுல உயிர் வாழ்ந்திட்டிருக்கு. காஞ்சிப் பட்டு, திண்டுக்கல் பூட்டு, திருநெல்வேலி அல்வா, தஞ்சாவூர் பொம்மை, ஊத்துக்குளி நெய், திருப்பாச்சி அருவான்னு சில இடங்கள்ல உற்பத்தி செய்யப்படற பொருட்களுக்கு மவுசு அதிகம். 

அந்த வகைல பத்தமடை பாய்க்கும் தனி மவுசு உண்டு. தாமிரபரணி ஆத்தோட கரையில கிடைக்கிற கோரைப் புல்லுல விதவிதமா இந்த பாய் தயாரிக்கப்படுது. இந்த கோரையை வெச்சி, துணி மாதிரி கூட பாய்களை நெய்யறாங்க. கர்ச்சீப் மாதிரி நாலா, எட்டா மடிச்சி பாக்கெட் வெச்சுக்கற அளவுக்கு மெல்லிசாவும் தயாரிக்கறாங்க. மறுபடியும் விறிச்சிப்போட்டா.. எந்த மடிப்பும் தெரியாது. 

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடைங்கற ஊர்ல முற்றிலும் கைத்தறியால தயாரிக்கப்படற பாய்க்கு உலகம் முழுசும் வரவேற்பு இருக்கு. அதை உறுதிப்படுத்தற விதமா.. இந்த பாய்க்கும், கும்பகோணம் பக்கத்துல உள்ள நாச்சியார்கோவில்ல தயாராகிற குத்து விளக்குக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. 

அறிவுசார் சொத்துரிமை துறையின் கீழ், புவிசார் குறியீடு வருது. பிரசித்தி பெற்ற பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பதிவு கிடைச்சா, அந்தப் பொருளை, வேறு எந்தப் பகுதியிலும் தயாரிச்சு, உரிமை கொண்டாட முடியாது. இந்தக் குறியீட்டை பெறணும்னா, முதல்ல அந்தத் துறையிடம் விண்ணப்பிக்கணும். பத்தமடை பாய், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு ரெண்டையும் புவிசார் குறியீடு பதிவேட்டில், பதிவு செய்யறதுக்காக, தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுக் கழகம் சார்பில், விண்ணப்பிச்சாங்க. புவிசார் குறியீடுத் துறை அதை பரிசீலனை பண்ணி புவிசார் குறியீட்டுக்கான இதழ்ல வெளியிட்டது.


கொண்டாட்டம் 

உறவுகளை புதுப்பிக்கவும், மனச்சோர்வை நீக்கி புத்துணர்வை பெறுவதற்காகவும் தான் பண்டிகைகளை நம்ம முன்னோர்கள் உருவாக்கி வெச்சிருக்காங்க. ஆனா.. இப்போ.. தீபாவளியை அப்படியான பண்டிகையா நினைக்க முடியலை. எங்க திரும்பினாலும் வேட்டுச் சத்தம். வயசாளிகள், நோயாளிகள், குழந்தைகள்னு எதைப்பத்தியும் கவலைப்படாம அன்னிக்கு வெடி போட்டதை சகிக்க முடியலை. அன்னிக்கு முழுசும் சென்னை நகரம் கந்தக புகையால சூழப்பட்டிருந்திச்சு. என்னோட டூ விலர் சீட்டை நகத்தால பிராண்டி வைக்கிற பூனை, அன்னிக்கு, வெடி சத்தத்துக்கு பயந்துக்கிட்டு ஒரு இடுக்குல பயந்து நடுங்கிக்கிட்டு ஒண்டிக்கிட்டிருந்ததை பாக்கவே பாவமா இருந்திச்சி. 

பட்டாசு வெடிச்சதாலா சென்னையில மட்டும் சின்னதும், பெரிசுமா 150 க்கும் மேற்பட்ட தீ விபத்துக்கள் ஏற்பட்டதாம். ராக்கெட் வெடி போட்டதால, 20 க்கும் மேற்பட்ட குடிசைகளும் எரிஞ்சி, அதுல இருந்தவங்க நடுத்தெருவுல நின்னு கதறினதை கண்கொண்டு பாக்க முடியலை. இரு ஒரு சோறு பதம். மாநிலம், நாடுன்னு போனா, உயிரிழப்புகளும், பொருளிழப்புகளும் அதிகம். இதையெல்லாம் எப்படி கொண்டாட்டமா எடுத்துக்கறதுன்னு தெரியலை. 

அதுவுமில்லாம, டாஸ்மாக்குகள்ல கூட்டமும், சினிமா கொட்டகைகளில் பால் மற்றும் பீர் அபிஷேகங்கள், தொலைக்காட்சி பெட்டிகள்ல நடிகர், நடிகைகளோட தத்துப்பித்து உளறல்களும் இப்போ பண்டிகைகளோட அம்சமா மாறினது வேதனையா சோதனையான்னு தெரியலை. 


ஒருவாட்டி உச்சா போனா.. 6 மணி நேரம் கரண்ட் 

எங்க போனாலும் கரண்ட் பெரிய பிரச்னையா இருக்கு. நைஜீரியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வர்ற ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுலம் இதே பிரச்னை. அந்த நாட்டோட பல பகுதிகள்ல மக்கள் இன்னும் கரண்ட்டுன்னா என்னன்னு தெரியாமயே காலத்தை கழிச்சிட்டிருக்காங்க.  இந்த நிலைமையிலதான் 14 வயசான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயசா£ன பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகள் சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கற முறையை கண்டுபிடிச்சிருக்காங்க. 

லாகோஸில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டுல அவங்க, தங்களோட கண்டுபிடிப்பை காட்சிக்கு வெச்சாங்க. 

சிறுநீரை முதலில் இவங்க, நைட்ரஜன், தண்ணீர் மற்றும் ஹைட்ரஜனாக பிரிக்கிறாங்க. அப்புறம், ஹைட்ரஜனை ஒரு நீர் வடிகட்டிக்குள்ள அனுப்பி சுத்திகரிக்கிறாங்க. அது ஒரு கேஸ் சிலிண்டருக்குப் போகுது.
அங்க ஹைட்ரஜன் போராக்ஸ் திரவமாக மாறுது. அப்புறம், அதிலேர்ந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுது. அந்த சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ஜன் வாயு, ஜெனரேட்டருக்குப் போய் மின்சாரத்தை உற்பத்தி செய்யுது. 
ஒரு லிட்டர் சிறுநீரைப் பயன்படுத்தினா 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்குதாம். 

நம்மூர்ல கரண்ட் இல்லாத டிரான்ஸ்பார்மர் பக்கம் ஒதுங்கற பிரகஸ்பதிகளைப் பிடிச்சாலே பல வருஷத்துக்குத் தேவையான கரண்டை எடுக்கலாம் போலிருக்கே. 



Friday 24 August 2012

லட்சியங்களை வகுத்துக்கொள்வது எப்படி?


சொந்த ஊருல, கிராமத்து பள்ளிக் கூடத்தில் மூணாப்பு படிச்சப்போ, எங்க கிளாஸ் டீச்சரா இருந்தவங்க கற்பகம் டீச்சர். எப்பவுமே நான் முத ரேங்க் எடுக்கறதாலயும், என்னோட அமைதியான சுபாவத்தாலும் எம் மேல அவங்களுக்கு பிரியம் அதிகம். ஒரு நா வகுப்பில, ''நீங்க படிச்சி என்னவாக போறீங்கன்னு வரிசையா ஒவ்வொருத்தரா எழுந்து சொல்லுங்க''ன்னாங்க. 
எல்லாருமே எழுந்து ''தெரியாது டீச்சர்''ன்னாங்க. என் முறை வந்தப்போ நானும், ''தெரியாது டீச்சர்''ன்னேன். ஒரே ஒருத்தன் மட்டும், ''எங்க மாமா மாதிரி நானும் போலீஸ் ஆகப்போகிறேன் டீச்சர்''ன்னான். மக்குப் பையனான அவனுக்கு அன்னிக்கு ஏக பாராட்டு. டீச்சர் எங்கிட்ட ரெண்டு நாள் பேசவே இல்லை. அப்போ எனக்கு லட்சியம்னா என்னன்னு கூட தெரியாது.  

பள்ளி படிப்பை முடிச்ச காலக்கட்டத்தில, ஒரு பிரபல பத்திரிகையில பத்திரிகையாளர் பயிற்சி முகாம் நடத்தினாங்க. அதுல நானும் கலந்துக்கிட்டேன்.  மொத்தம் நாங்க 25 பேர். குழு விவாதம் செஞ்சப்போ நாங்க தனித்தனியா எழுந்து, சுய அறிமுகம் செஞ்சுக்கிட்டோம். அப்போ, எங்களோட லட்சியம் பத்தி பேசறப்போ, பத்திரிகையாளர் பயிற்சி முகாமில கலந்துக்க வந்துட்டு, சம்பந்தமே இல்லாம எல்லாரும், டாக்டராகணும், வக்கீலாகணும், இன்ஜினியராகணும் சொன்னாங்க. 25 பேர்ல நான் மட்டுந்தான், பத்திரிகையாளனாகணும்னேன். 

அதுக்கு ஏத்தமாதிரி, எழுதறது படிக்கறதுன்னு, எப்பவும் என் சிந்தனை அதை நோக்கியே இருந்திச்சி. என் இலட்சியம் நிறைவேறிட்டதாதான் இப்போ நினைக்கிறேன். 

நீங்க வெற்றியாளராகணும்னா, முதல்ல இலட்சியங்களைப் பத்தி சிந்திங்கங்கறாரு ஒரு அறிஞரு. வாழ்க்கையோட மாற்றத்துக்கும், வளச்சிக்கும் இலட்சிய நோக்கு முக்கியம். நாம் போக வேண்டிய இலக்கு முடிவாய்ட்டா, பாதையும், திசையும் அதுவாவே தெளிவாயிடும். அதனால, வாழ்க்கையோட இலங்கை தீர்மானிச்சு, அதை நோக்கி நீங்க கவனம் செலுத்தத் தொடங்கிட்டா.. பின்னால அதுவே உங்களை இயக்கும். 

இதுதான் இலட்சியமா இருக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல. உங்களுக்கு பிடிச்ச எந்த துறையிலயும் உங்க லட்சியம் அமையலாம். வாழ்க்கையில ஒருத்தருக்கு பல லட்சியங்கள் இருக்கலாம். ஆனா.. ஏதோ ஒண்ணுதான் முக்கிமானதா இருக்கும். பெரிய இலட்சியத்தை அடையறதுக்கு சின்ன லட்சியம் உதவியா இருக்கும். 

லட்சியங்களை உருவாக்கறது எப்படி ? அதுக்கான பத்து விதிகள் இது 

1. உங்களுக்கு ஆர்வமான துறையில, உங்க லட்சியம் எதுன்னு தீர்மானிச்சுக்கங்க. பணம் சம்பாதிக்கறதோ, பதவிய பிடிக்கிறதோ ஏன் ஒரு நடிகையை கல்யாணம் பண்றதாக் கூட உங்க லட்சியம் எதுவா வேணா இருக்கலாம். 

2. வகுத்துக்கிட்ட லட்சியத்தை எந்த காலக்கட்டத்துக்குள்ள அடையறதுன்னும் திட்டமிடுங்க. அதுதான் முக்கியம். 

3. அந்த லட்சியத்தை அடையறதுக்குள்ள வாய்ப்புக்களை உருவாக்குங்க. ( வாய்ப்பு கிடைக்கும்னு காத்திருக்காம, அதை நீங்களே உருவாங்குங்கன்னு பெரியவங்க சொல்லுவாங்க)

4. உங்க லட்சியம் இதுதான்னு தீர்மானிச்சப்புறம், அது தொடர்பான தகவல்களை சேகரிங்க. அதுக்கு ஏத்த மாதிரி உங்க திறமைகளையும் வளர்த்துக்கங்க. அந்த துறை சம்பந்தமான மனிதர்களை சந்திச்சு, அவங்களோட ஆலோசனைகளை கேளுங்க. 

5. லட்சியத்தை அடையறதுக்கு நீங்க மேற்கொள்கிற முயற்சிகள்ல தடை ஏற்பட்டா, அதை சமாளிக்கவும் கத்துக்கங்க. 

6. திட்டமிட்ட குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள்ள லட்சியத்தை அடைஞ்சிட்டா, அதால கிடைக்கக் கூடிய சாதக பாதகங்களை தெரிஞ்சிக்கங்க. 

7. உங்க லட்சியத்தை அடையறதுக்கான மூலத்திட்டம் வடிவம் ஒண்ணையும் உருவாக்கிக்கங்க. 

8. உங்க லட்சியம் என்னங்கறது எப்பவும் உங்க ஞாபகத்துல இருக்கட்டும். நீங்க செய்யற செயல்கள் ஒவ்வொண்ணும் அதை நோக்கியே இருக்கணும். 

9. அப்புறம், உங்க லட்சியத்தை நீங்க அடைஞ்சிட்டதாவே கனவு காணுங்க. 

10. தகுந்த திட்டமிடல்களோட, உங்க லட்சியத்தை நோக்கி பயணப்பட துவங்குங்க. 


நிறைவா வார பத்திரிகையில படிச்ச குட்டிக்கதை ஒண்ணு 

ஒரு சாமியார்கிட்ட வந்த ஒருத்தன், 'நான் சாதிக்கணும்னா என்ன சாமி செய்யணும்' ன்னான். அதுக்கு அவரு, 'உன் பலத்தையெல்லாம் ஒண்ணா திரட்டி, தொடர்ந்து முயற்சி செய்'ன்னார். 'அது எப்படி?'ன்னு திரும்பவும் கேட்டான் அவன். அவனை ஒரு குளத்துக்கு கூட்டிட்டு போன சாமியார், 'கண்ணை மூடி, கடவுளை வேண்டிக்கிட்டு மூணு முறை முங்கி எந்திரி'ன்னாரு. அவன் முதல் தடவை முழ்கினதும், அவன் எதிர்பாராத நேரத்தில, அவன் தலையைப் பிடிச்சி பலமா அவன் எந்திரிக்காத மாதிரி தண்ணிக்குள்ள அமுக்கினாரு. கொஞ்சம் தாமதிச்சாரும் உயிர் போற நிலை. அவன், தன்னோட முழு பலத்தையும் திரட்டி, திமிரிக்கிட்டு வெளியே வந்தான். அப்போ சாமியார் சொன்னார், 'சாதிக்கணும்னா இந்த மாதிரிதான் முழு பலத்தோட முயற்சி செய்யணும்னாரு. சரிதானே.  


Tuesday 21 August 2012

வழக்கம் போல ஒரு அதிர்ச்சித் தகவல்





சில வருஷத்துக்கு முன்னால, போதை பாக்குகளை விக்கறதுக்கு தடை விதிக்கப்பட்டது ஞாபகமிருக்கலாம். நம்மாளுங்க சும்மா இருப்பாங்களா ? குழந்தைங்க சாப்பிடற மிட்டாய்கள் பாக்கெட்ல அந்த பாக்குகள் பெட்டிக்கடைகள்ல தொங்க ஆரம்பிச்சுது. இன்னிய வரைக்கும் அதான் நிலைமை. அந்த சட்டம் அமல்ல இருக்காங்கறது ஆண்டவனுக்கே வெளிச்சம். அப்புறம் பொது இடங்கள்ல புகை பிடிக்கக் கூடாது, எச்சில் துப்பக் கூடாதுன்னு சொன்னாங்க. ஆனா.. அதெல்லாம் சர்வ சாதாரணமா நடந்துக்கிட்டுதான் இருக்கு. 


பஸ் பயணம்னாலே ஜன்னலோர சீட்டுதான். ஆனா.. பாக்கு எச்சில் வழிஞ்சி காய்ஞ்சிருக்கிற அங்க உக்காரவே அருவெருப்பா இருக்கு. போகட்டும். மது விலக்கு, புகையிலை பொருட்களுக்கு தடைன்னு செய்திகள் ரெக்கை கட்டி பறக்குது. இது வதந்தியா இல்லாம உண்மையா இருந்தா நல்லா இருக்கும். பார்ப்போம். 

அப்புறம், மேட்டருக்கு வருவோம். உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில 2020ம் ஆண்டுல,  இந்தியாவில் மட்டும் 16 லட்சம் பேர் புகையிலை நோய்களால உயிரிழப்பை சந்திப்பாங்களாம்.   புகையிலையால நுரையீரல், கண்பார்வை போன்றவை தான் அதிகம் பாதிக்கப்படுது. புகைப்பழக்கம் காரணமா ஏற்படற நரம்புத்தளர்ச்சியால பாதிக்கப்பட்டு ஆண்மையை இழக்கறவங்களும் அதிகரிச்சிட்டாங்களாம்.  இந்த காலக்கட்டத்துல இந்தியாவுல வருஷத்துக்கு 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால உயிரிழக்கறாங்களாம். உலகத்துல, மனித இறப்புகளை தோற்றுவிக்கற முக்கிய காரணிகள்ல புகையிலை 2வது இடத்தை பிடிச்சிருக்காம். 

Sunday 19 August 2012

சென்னைக்கு 373 வயசு




சென்னை யாருக்கும், எப்போதுமே அலுக்காத நகரம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைங்கறதால, அதோட உருமாற்றங்களை ஒரளவு பாத்திருக்கேன். ஆள் நடமாட்டமில்லாத, இதெல்லாம் டெவலப் ஆகவே ஆகாதுன்னு நினைச்ச பல ஏரியாக்கள் நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு மாறியிருக்கு.

ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், தபால் தலைகள் சேகரிக்கற மாதிரி சென்னையை பத்தின வரலாற்றையும், செய்திகளையும் சேகரிக்கறது என்னோட பொழுதுபோக்குகள்ல ஒண்ணு. சென்னை வரலாறுன்னு ஒரு தடியான புத்தகத்தை வாங்கி வெச்சிருக்கேன். இன்னும் முழுசா படிச்சி முடிக்கலை. அசோகமித்திரனோட எழுத்துக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரோட புலிக்கலைஞன் சிறுகதையை மறக்கவே முடியாது. அதோட, ஒரு பார்வையில் சென்னை நகரம்னு அவர் சென்னையைப் பத்தி எழுதின கட்டுரைத் தொகுப்பு ரொம்பவே சுவாரஸ்யமான புத்தகம். 

தி.நகரை பத்தி அவர் எழுதறப்போ, அவர் சென்னைக்கு வந்த புசுல, உஸ்மான் ரோட்டுல நடந்திட்டிருக்கும் போது, மாம்பலம் ரயில் நிலையத்தில ரயில் வர்ற சத்தம் கேட்டதும், ரங்கநாதன் தெருவழியா ஓடிப் போய் ரயிலை பிடிப்பாங்களாம். அப்புறம்.. பசங்க ரங்கநாதன் தெருவுல கிரிக்கெட் விளையாடுவாங்களாம். அப்படியான சூழ்நிலையையை இப்போது கற்பனை செஞ்சு கூட பாக்க முடியாது. ஒரு சாதாரண நாள்ல உஸ்மான் ரோட்டுலேந்து ரங்கநாதன் தெரு வழியா ரயில்நிலையத்துக்கு போறதுக்கு இப்போ குறைஞ்சபட்சம் அரைமணி நேரமாவது ஆகும். திருவிழா நாட்கள் சொல்லவே வேணாம். 

ஆனா.. இன்னமும் அந்த அசாதாரண சூழ்நிலையில ஒரே ஒரு வீடு அங்க இருக்கறதும், மனிதர்கள் அங்கு குடியிருக்கறதும் ஆச்சரியமான விஷயம். அது தவிரவும், பேச்சிலர்கள் தங்கியிருக்கிற மேன்சன்கள் ரங்கநாதன் தெருவில இருக்கறதா கேள்வி பட்டிருக்கேன். பாத்ததில்லை. அந்த தெருவுல மனிதர்கள் வசிக்கிறதை கற்பனை செஞ்சு பார்க்க முடியாத விஷயங்கள்ல ஒண்ணுங்கறது என்னோட தனிப்பட்ட கருத்து. 


பரங்கிமலையில உள்ள தேவாலயத்துக்கு எப்போவாவது போவேன். அங்கேயிருந்து பாத்தா முழு சென்னையையும் பாக்கலாம். ஆரம்பத்துல பாத்ததுக்கும், இப்போ பாக்கறதுக்கும் ரொம்ப வித்தியாசம் தெரியுது. முதல்ல சென்னையில் உயரமான கட்டிடம் எல்.ஐ.சி. கட்டிடம் மட்டும் தனிச்சு தெரியும். அப்புறம் கடலும் தெரியும். அப்புறம் வளைஞ்சி நெளிஞ்சி போற மவுண்ட் ரோடும், அதில எறும்பு ஊர்ந்து வாகனங்கள் போறதும் தெரியும். இப்போ சில மாசங்களுக்கு முன்னால பாத்தப்போ, இந்த காட்சியில நிறையவே மாற்றம். கடல் தெரியலை. ரோடுகளும் தெரியலை. காரணம் பெரிய பெரிய கட்டிடங்கள் முளைச்சி எல்லாத்தையும் மறைச்சிடுச்சி. 

அப்புறம் பசுமையா தெரிஞ்ச பல இடங்கள் நிறம் மாறியிருக்கு. நகரம் முழுக்க ஊசி ஊசியா செல்போன் கோபுரங்கள். புதுசா நடவு செஞ்ச வயல்ல நாற்றுக்கள் குச்சி குச்சியா நிக்குமே அதுமாதிரி தெரியுது. 

சென்னையோட பரபரப்பு ரொம்பவே அலுத்துப் போன ஒண்ணு. சென்னையை விட்டு, ஏதாவது ஒரு கிராமத்துல செட்டிலாகணும் ஆசை. ஆனா.. சென்னையை விட்டு, வேற இடத்துல வசிக்கிறதை கற்பனை செஞ்சு கூட பாக்க முடியலை. ரொம்பவும், பிடிச்ச அதே நேரத்துல பிடிக்காத நகரமும் சென்னைதான். 

சென்னை எல்லா தரப்பு மக்களும் பிழைச்சிருக்க ஏத்த நகரம். ஆனா.. இது வாழறதுக்கு ஏத்த நகரமில்லை. இதுவும் என்னோட தனிப்பட்ட கருத்துதான். 



உலக புகைப்பட தினம்



ந்தத் துறையாக இருந்தாலும் இப்போது புகைப்படம் என்பது தவிர்க்க முடியாத விஷயம். இன்னிக்கு (ஆகஸ்ட் 19) உலக முழுக்க புகைப்பட தினம் கொண்டாடப்படுது.


பக்கம், பக்கமா எழுதற எழுத்து ஏற்படுத்தாத தாக்கத்தை ஒரு புகைப்படம் ஈசியா உணர்த்திடும். புகைப்படம்ங்கிறது நிகழ்காலத்தோட ஒரு நொடியை காட்சியா உறைய வைக்கிற அபூர் கலை.  புகைப்படம் மனித வாழ்க்கையில முக்கியமான அம்சம். 

புகைப்பட கேமராவுக்கு முன்னோடியாக இரு படப்பெட்டி தான் கேமராவா இருந்திச்சாம். கி.மு. 5-ம் நூற்றாண்டுல சீன தத்துவ மேதை மோ ட்டி, ஒரு துளை வழியாக ஓர் இருண்ட பகுதிக்குள்ள ஒளி கடந்து போகும்போது ஒரு தலைகீழ் மற்றும் முகப் படத்தை உருவாக்க முடியும்னு சொன்னாரு. அதானல கேமராவோட  செயல்பாட்டை முதல் முதலா பதிவு செஞ்சவர் இவர்தான். 

இவருக்கு அடுத்தபடியா பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர் பாயில், அவரது உதவியாளர் ராபர்ட் ஹுக் ஆகியோர் இணைஞ்சு 1660-ம் ஆண்டு ஒரு சின்ன கேமரா மற்றும் இரு படப் பெட்டிகளை உருவாக்கினாங்க. 

அப்புறம், 1839-ல் கேமரா எனும் புகைப்படக் கருவிகள் உலகச் சந்தைக்கு வந்தன. இதன் வெளிப்பாடா ஜனவரி 9-ம் தேதிய உலக புகைப்பட நாளா கொண்டாடினாங்க. அப்புறம் இந்த நாள் ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு மாறிடுச்சி. 1920-ல் பல வகைகளில் கேமராக்கள் தயாரிக்கப்பட்டுச்சி. 

உலக புகைப்பட தினத்தையொட்டி, சிறந்தப் படத்துக்குப் பரிசுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் குடுத்தது. மரப்பெட்டியில் கேமரா கருவி பொருத்தி கறுப்புத் துணியால மூடி புகைப்படம் எடுத்த காலம் மலையேறிப் போச்சு. இப்போது, செல்போன், ஐ-பேட், கையடக்க கணினி என பலவற்றிலும் கேமராக்கள் வந்தாச்சு.

2009-ம் ஆண்டுதான் உலக புகைப்பட தினத்துக்கான அமைப்பு தொடங்கப்பட்டது. முன்னாடில்லாம் கேமராவை லேசாக அசைத்தாலோ, கை நடுங்கினாலா, குறிப்பிட்ட அளவுக்கு மேல திருப்பினாலோ அந்தப் புகைப்படம் சரியாக வராது. இப்போது டிஜிட்டல் கேமராக்கள் வந்துட்டதால கை நடுக்கம் இருந்தாலும் கவலையில்லை. 

முன்னாடி பிலிம் ரோல்களை பயன்படுத்தித்தான் புகைப்படம் எடுக்க வேண்டியிருந்துச்சி. இப்போ, குட்டியான மெமரி கார்டுகளே போதுமானது. நெட்டிவ், பாசிட்டிவ், டெவலப்பிங், பிரிண்டிங் அதை பாதுகாத்து வைக்கிற இம்சைகள் எதுவுமே இப்போ இல்லை. 



Sunday 5 August 2012

நொறுக்ஸ்


பெரிய விஷயங்களை விட 

சின்ன விஷயங்கள் தான் நம்மளை காயப்படுத்தும். 

உதாரணமா, குதிரை மேல உக்காரலாம். 
குண்டூசி மேல உக்கார முடியுமா ?



தலைகீழ் 'தாரகம் '

' Able was i ere i  saw Elba' என்பது மாவீரன் நெப்போலியனோட புகழ் பெற்ற வாசகம். இதோட சிறப்பு என்னன்னா.. இந்த வாசகத்தை வலமிருந்து இடமா படிச்சாலும் வார்த்தைகளும், அர்த்தமும் மாறாம வரும். 


கொடிய மிருகம் 

'' குருவே.. உலகத்துலயே மிகவும் கொடிய மிருகம் எது?'' ன்னு.. அரிஸ்டாட்டில் கிட்ட சிஷ்யர் ஒருத்தர் கேட்டாரு.
அதுக்கு அவர், '' உலகத்துலயே நாக்குதான் மிகக் கொடிய மிருகம். அதை ஒரு தடவை அவுத்து விட்டுட்டா..திரும்பவும் அதை கட்றது கஷ்டம்''ன்னாரு.



தொடர் பயணம் கூடாது. 


எப்பவோ படிச்ச சர்தாஜி ஜோக் ஒண்ணு..

ரயில்ல பிரயாணம் பண்ணிக்கிட்டிருந்த சர்தாஜி, ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ரயில் நிக்கிறப்போ.. கீழே இறங்கி பிளாட்பாரத்துல நிப்பாரு. ரயில் புறப்பட்டதும் ஓடிவந்து ஏறிக்குவாரு. இதை ரொம்ப நேரமாக கவனிச்சிட்டிருந்த சக பயணி, 'ஏன் இப்படி பண்றீங்க' காரணம் கேட்டாரு. அதுக்கு சர்தாஜி ரொம்ப பொறுமையா, ' எனக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு. அதனால.. டாக்டர் தொடர்ச்சியா பிரயாணம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாரு.. அதனாலதான் இப்படி'ன்னாரு. 

என்னா ஒரு புத்திசாலித்தனம். 


பேஸ் புக்கை திறந்ததும் தான் இன்னிக்கு நண்பர்கள் தினம் தெரிய வந்துச்சு. விதவிதமாக நிறைய பேர் வாழ்த்து சொல்லியிருந்தாங்க. இதுவே.. பிப்ரவரி 14 ம் தேதியா இருந்தா.. ஊரே அதகளப்பட்டிருக்கும். எல்லா சேனல்லயும் சிறப்பு நிகழ்ச்சிகளை போட்டு கொலையா கொன்னிருப்பாங்க. பாவம்.. நண்பர்கள் மட்டும் என்ன பாவம் செஞ்சாங்களோ.. அவங்களை யாரும் கண்டுக்கறதே இல்லை. எனக்கு நண்பர்கள் வட்டம் கொஞ்சம் பெரிசு. எல்லாரையும் தினசரி சந்திக்க முடியறதில்லை. சிலரை சந்திச்சு மாசக்கணக்குல இருக்கும். ஏன் சிலரை சந்திச்சு வருஷக் கணக்குல கூட இருக்கும். சம்பிரதாயமா போன் பண்ணி யாருக்கும் நண்பர்கள் தின வாழ்த்து சொல்லணும்னு தோணலை. அதே மாதிரி எனக்கும் அப்படிப்பட்ட போன் எதுவும் வரலை. பேஸ்புக்ல கூட தனிப்பட்ட முறையில யாரும் வாழ்த்து தெரிவிக்கலை. பொதுவான அவங்களோட சுவத்துல எழுதியிருந்ததுதான். 
நட்புல எதுக்கு பாசாங்கு? 

'ஒவ்வொரு நாளும் ஆனந்தம்'னு ஒவ்வொரு நாளைக்கு ஒரு பொன்மொழி இருக்கற குட்டி புக் ஒண்ணு வாங்கினேன்.
அதுல இன்னிய தேதில இருந்த வாசகம்.. ' எதிர்காலத்தை உருவாக்குவதில் கனவைப் போல உதவுவது வேறொன்றில்லை.'



குறிப்பு ஒண்ணை எடுக்கறதுக்காக, பழைய நோட்டுக்களை புரட்டிக்கிட்டிருந்தேன். ஒரு நோட்டுல.. நட்பு பற்றி நான் எப்போதோ தொகுத்து வெச்சிருந்த பொன்மொழிகள் கிடைச்சது. என்ன ஆச்சரியமான ஒற்றுமை. 


** இன்பத்தை இரட்டிப்பாக்கி, துன்பத்தை பாதியாக குறைப்பது நட்பு - பிரான்சிஸ் - பேக்கன்


** ஆத்திர மிக்க நட்பு, சில வேளைகளில் அமைதியான பகைமையைப் போலவே கேடு விளைவிக்கக் கூடியது - ஷேக்ஸ்பியர்


** நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில் தலைசிறந்தது - பெஞ்சமின் டிஸ்ரேலி


**நட்பைக் கொடுத்துதான் நட்பை வாங்க முடியும் - தாமஸ் வில்லியம் நட்பு காதலாக மலரக்கூடும், மலரவும் செய்கிறது. ஆனால், காதல் ஒருபோதும் நட்பாக அடங்குவதில்லை - பைரன் பிரபு 


**பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை, மனிதனுக்கு நட்பு - வில்லியம் பிளேக் 


*நூறு நண்பர்கள் கூட மிகக் குறைவுதான், ஒரு பகைவன் கூட மிக அதிகம்தான் - திபெத் 


**  சண்டைக்குப் பின் சமாதானமான நண்பன் இருமடங்கு எதிரி - யாரோஎதிரியின் முத்தங்களைவிட, நண்பனின் அடிகள் சிலாக்கியமானவை - தாமஸ் ஏ.பெக்கட்


** நண்பனுடன் உரையாடுவது, உரக்க சிந்திப்பதற்கு சமம் - ஜோசம் அடிசன்

** உன் உறவினரை தேர்ந்தெடுப்பது ஊழ்வினை, உன் நண்பர்களை தேர்ந்தெடுப்பது நீயே - ஜேக் 


Friday 3 August 2012

இந்திய சினிமா 100 - 3




** சினிமாவுக்காக வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை 'மூவி மிரர்' இந்த பத்திரிகையை 1927ம் ஆண்டு எஸ்.கே. வாசன் என்பவர் தொடங்கினாரு. தமிழ்ல வெளிவந்த முதல் சினிமா பத்திரிகை 'சினிமா உலகம்'. இதை 1935ம் ஆண்டு பி.எஸ். செட்டியார் என்பவர் வெளியிட்டாரு. 

** தென்னிந்திய மொழியில் 'டப்பிங்' செய்யப்பட்ட முதல் படம் 'அரிச்சந்திரா' இதை 1943ம் ஆண்டு தயாரிச்சவரு ஏவி.எம். 

** இந்தியாவுக்குள்ள முதல் முதலா காட்டப்பட்ட முதல் மௌனப்படம் 'ஏசுவின் வாழ்க்கை'. 'டூபாண்ட்'ங்கற பிரெஞ்சுக்காரர் 1896ம் ஆண்டு மும்பையில பொதுமக்களுக்கு போட்டு காட்டினாரு. 

** இந்திய சினிமாவுல முதன் முதலா கதாநாயகியா நடிச்சது ஒரு சிறுவன். 'சோலங்கி' என்ற அந்த சிறுவன் 'ராஜா அரிச்சந்திரா' படத்துல பெண் வேஷம் போட்டு, 'தமயந்தி' கதாபாத்திரத்துல நடிச்சான். உண்மையான முதல் கதாநாயகி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கமலா'ங்கற பெண்மணிதான். 1913ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே தயாரிச்ச 'பாஸ்மாசூர் மோகினி'ங்கற படத்துல அவங்க முக்கிய வேடத்துல நடிச்சாங்க. 

** ஆரம்பகால சினிமா படங்கள் ஊமைப்படங்களாவே வந்திச்சுன்னு நமக்குத் தெரியும். பிறகு பேசும் படங்கள் வந்தன. பேசும் சினிமாக்கள் வந்த பிறகும் ஊமைப்படங்கள் வந்தா எப்படி இருக்கும்?
இப்படி உருவான முதல்படம் 'இங்கீத்'ங்கற பெங்காலி படம். 1961ம் ஆண்டு வெளியான இந்த படத்துல வசனமே கிடையாது. பின்னணி இசை மட்டும்தான் இருந்திச்சு. அதுக்கு அப்புறம் 1987ம் ஆண்டு சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்துல பேசாத படம் வெளி வந்துச்சு. தமிழ்ல 'பேசும் படம்', தெலுங்குல 'புஷ்பக் விமானா', இந்தில,'புஷ்பக்'ன்னு வெவ்வேற பெயர்கள்ல வெளியாச்சு. இந்த படத்துல கதாநாயகனா நடிச்சவரு நம்ம கமல்ஹாசன். 

** சினிமாவை செட்டுகள் ஆட்டிப்படைச்ச காலத்துல ஒரு செட் கூட போடாம எடுக்கப்பட்ட படம், ' ஆஸ்மான் மஹால்'ங்கற படம். இது 1965ம் ஆண்டு வெளியாச்சு. 

** இயக்குநர் மணிரத்ம் எடுத்த 'தில்சே' (தமிழ்ல 'உயிரே') படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. பிரிட்டன்ல 'டாப் டென்' படங்கள்ல இடம்பிடிச்ச முதல் இந்திய திரைப்படம் இதுதான். 

** உலகத்துலயே அதிக படங்கள்ல கதாநாயகனா நடிச்ச நடிகர் பிரேம் நசீர். அதுவுமில்லாம, ஒரே ஆண்டுல அதிக படங்களிலும் நடிச்சி சாதனை படைச்சிருக்காரு. 1979ம் ஆண்டுல மட்டும் இவரு நடிச்ச 39 படங்கள் வெளியாச்சு. உலக அளவிலான இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கலை. 

** ஆரம்ப காலத்துல வெளியான சினிமாக்கள் பெண்கள் நடிக்கலை. ஆண்கள்தான் பெண் வேஷம் போட்டு நடிச்சாங்க. அதுக்கு அப்புறம் பெண்களும் நடிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, பெண் கதாபாத்திரமே இல்லாத ஒரு படம் வந்திருக்கு. மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்துல மம்முட்டி கதாநாயகனா நடிச்ச 'மதிலுகள்'தான் அந்த படம். இதுல ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை. 

** நடிகை மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் நடிச்சி சாதனை படைச்சிருங்காங்க. அதேபோல சத்தமில்லா வேறொரு சாதனையும் செஞ்சிருக்காங்க. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் கூட நாடகங்களிலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கூட சினிமாவுலயும் நடிச்சிருக்காங்க. அதனால, அதிக முதல்வர்களோட நடிச்ச பெருமை அவங்களுக்கு இருக்கு. அதே மாதிரி, ஏவி.எம். நிறுவனம் தயாரிச்ச படங்கள் பணி புரிஞ்ச அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ஆர். ஆகியோர் முதலமைச்சரா ஆகியிருக்காங்க.  


Tuesday 31 July 2012

நொறுக்ஸ்

குடிப்பது இப்போது சமூக அந்தஸ்தாக மாறி வருகிறது. குடிக்கும் பழக்கம் இல்லையென்றால் சற்றே அதிர்ச்சியாகவும், விநோதமாகவும் பார்க்கிறார்கள்.  பேருந்து வசதி இல்லாத கிராமத்தில் கூட மதுக்கடைகளை திறந்து, சிறந்த 'குடி'மக்களை உருவாக்கும் மகத்தான பணியை அரசு செய்துகொண்டிருக்கிறது.
               
அண்மையில், செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றில், பள்ளி பெஞ்சுகளை விற்று மாணவர்கள் சிலர் மது குடித்ததாகவும்,  சில மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வருவதாகவும் ஆசிரியர்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். 
               
இதனை, அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் எனது உறவுக்காரர் ஒருவரும் உறுதிபடுத்தினார். அப்படி தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க முடியாத நிலை இப்போது உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காரணம், மாணவர்களை கண்டித்தால், ஆசிரியர் அடித்ததாக பொய் புகார் அளிப்போம் என்று பகிரங்கமாவே மிரட்டுவதாக வருத்தப்பட்டார். 
               
எனவே, எதற்கு வம்பு என்று, வந்ததோமா, வேலையை பார்த்தோமா, முதல் தேதியானால் சம்பளம் வாங்கினோமா என்று ஆசிரியர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர்.  
             
மதுவிலக்கு இப்போது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால், பார்களை ஒழிப்பதுடன், பொது இடங்களில் குடித்துவிட்டு நடமாடுவதற்கும் தடை விதித்தால், பள்ளி மாணவர்கள் சீரழிவதையாவது ஓரளவேணும் தடுக்க முடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. 

                       
மதுக்கடைகள், ஒயின் ஷாப்புகளாக தனியார் வசம் இருந்தபோது, கடை முன்பு நின்று குடிக்க கடைக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இப்போது, அந்த நிலை இல்லை. பாதி தெரு வரை குடிமகன்கள் ஆக்ரமித்துக் கொண்டு, சாலையிலேயே நின்று குடித்து, அழிச்சாட்டியம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பெண்கள் அந்த பகுதியிலேயே நடமாட முடியாத சூழல் உருவாகிறது. 

                       
சில இடங்களில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் அருகிலேயே அரசு மதுக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்வதை என்னவென்று சொல்வது ? 

எலைட் பாரெல்லாம் திறந்து, பெண்களின் தாலியை அறுத்துவிட்டு, தாலிக்கு தங்கமும், மிக்சி, கிரைண்டர், ஆடுமாடுகள் தருவதால் எந்த பிரயோஜனமும் இல்லையென்பதை அரசு உணருமா தெரியவில்லை. 

பின்குறிப்பு : இந்த பதிவை எழுதி முடித்துவிட்டு, டி.வி. பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில், ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது. சேலம் அருகே பள்ளி வளாகத்தில் மது அருந்திய நான்கு மாணவர்கள், கண்டித்த ஆசிரியரை  தாக்கினர் என்பதே அது.

 நாடு நல்லாத்தான் முன்னேறிக்கிட்டிருக்கு. 


*****************************

"ஹலோ யார் பேசறீங்க.."

"நான்.. கோட்டூர்புரத்திலேர்ந்து ராஜா பேசறேன்."

"உங்க ரேடியோ வால்யூமை குறைச்சி வைங்க.ராஜா..."

"ம் குறைச்சிட்டேன் மேடம்.." 

"ம்.. இப்போ சொல்லுங்க.. நீங்க யாரை, லவ் பண்றீங்க சார்.."

"நான்.. திவ்யாவை லவ் பண்றேன்.." 

"வெரிகுட்.. எத்தனை வருஷமா லவ் பண்றீங்க.."

"ரெண்டு வருஷமா மேடம்.." 

"அப்படியா.. ம் நீங்க சொல்லுங்க ராஜா.. அவங்களை வெளில எங்கேயெல்லாம் கூட்டிட்டு போயிருக்கீங்க.. 'மேட்டரை'யெல்லாம் முடிச்சிட்டீங்களா ?"

"ஹி ஹி.. அதுவந்து.. மேடம்.." 

- இப்படி போன அந்த உரையாடல்..சத்தியமாக நம்புங்கள்.. ஒரு தனியார் பண்பலை வானொலியில் நான் காதாரக் கேட்டது. அதே வானொலியில், ஆண் நிகழ்ச்சி தொகுப்பாளர்.. தன் சக தொகுப்பாளரைப் பார்த்து உதிர்த்த தத்துவ முத்து ஒன்று.. '' எருமைக்கு சுடிதார் போட்டா மாதிரி இருக்கற சப்ப ஃபிகர் நீ '' 

கலையை எப்படியெல்லாம் வளர்த்து டெவலப் பண்றாய்ங்க..

*****************************


பெர்னாட் ஷா தன்னோட வீட்ல உட்கார்ந்து நண்பர்களோட சுவாரஸ்யமாக பேசிக்கிட்டிருந்தாரு. பக்கத்து ரூம்ல.. அவரோட மனைவி பெரிய இரைச்சலோட தையல் மிஷின்ல துணி தெச்சிக்கிட்டிருந்தாங்க.  பெர்னாட் ஷாவோட நண்பர்கள் அவங்கக்கிட்ட போய், 'உங்க கணவர் இவ்வளவு சுவாரஸ்யமா பேசிக்கிட்டிருக்காரு.. அவரோட பேச்சை கேக்கறதுல உங்களுக்கு ஈடுபாடு இல்லையா'ன்னாங்க.   அதுக்கு கோபத்தோட அந்தம்மா.. 'என் கைல மட்டும் இந்த தையல் மிஷின் இல்லேன்னா.. நேரா போய் அவரோட கழுத்தை திருகியிருப்பேன். உருப்படியான வேலை பார்க்காம எப்போ பார்த்தாலும் வெட்டி நியாயம் பேசிக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு'ன்னாங்களாம். 


*****************************



ண்டுக்கு பல்லாயிரம் பேர் சாலை விபத்துக்களில் மரணமடைவதாக அண்மையில் ஒரு புள்ளி விவரத்தை படிக்க நேர்ந்தது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தான் அதிக அளவில் உயிரிழப்பை சந்திக்க நேர்கிறதாம். குடித்துவிட்டு, வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவு, தலைக்கவசம் அணியாதது என்று பொத்தாம் பொதுவாக பழியை வாகன ஓட்டிகள் மீது போடப்படுவது வழக்கம். ஆனால், மோசமான, பராமரிப்பில்லாத சாலைகளும் ஒரு காரணம் என்பதை ஏனோ யாரும் கவனத்தில் கொள்வதே இல்லை. அண்மையில், சென்னையில், ஒரு அமைச்சரின் மகன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வேகத்தடையில் இடறி விழுந்து மரணமடைந்தார். அவர் அமைச்சரின் மகன் என்பதால், இரவோடு இரவாக, சில இடங்களில் வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது. அப்போதுதான், வேகத்தடையில் வர்ணம் பூசியிருக்க வேண்டும் என்பதே என்னை போன்ற சாதாரணர்களுக்கு தெரியவந்தது. இறந்தவர், சாதாரண பொது ஜனம் என்றால், அதுவும் நடைபெற்றிருக்காது. வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகைகளை நெடுஞ்சாலைகளில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். சென்னையில், இதுவரை என் கண்ணில் பட்டதே இல்லை. ஒருவேளை எங்காவது இருந்து நான்தான் கவனிக்காமல் போகிறேனோ என்னவோ ? 


*****************************

பிரிட்டிஷ் மன்னர் தன்னோட பேரக் குழந்தைகளோட டைனிங் டேபிள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தாரு.  அப்போ, ஒரு பேரன் ஏதோ பேச வாயெடுத்தான். உடனே, மன்னர் அவனை கையமர்த்தி, 'இதோ பாரு.. ஆல்பர்ட்..சாப்பிடும் போது டைனிங் டேபிள்ல பேசக் கூடாது. ராஜ குடும்பத்துல இது அநாகரீகமான விஷயம் அதனால.. எதுவா இருந்தாலும் சாப்பிட்டு முடிச்சிட்டு பேசலாம்'ன்னாரு.   அமைதியா எல்லோரும் சாப்பிட்டு முடிச்சுட்டு எழுந்ததும், பேரன்கிட்ட மன்னர், ' ஏதோ சொல்ல வந்தியே என்ன'ன்னு கேட்டாரு. அதுக்கு அந்த பேரன், ' இப்போ அதைச் சொல்லி பயனில்லை'ன்னான். 'பரவால்ல.. எதுவானாலும் சொல்லு'ன்னாரு மன்னர். அதுக்கு அந்த பேரன் கூலா, 'நீங்க சாப்பிட்ட தட்டுல ஒரு பூச்சி செத்து கிடந்துச்சி.. அதைத்தான் சொல்ல வந்தேன். ஆனா.. நீங்க அதையும் சேர்த்து சாப்பிட்டுட்டீங்க'ன்னான். 

*****************************

Thursday 26 July 2012

ஒர் அதிர்ச்சி தகவல்



     வாழ்க்கையில் தோல்வியும், விரக்தியும் ஏற்படும்போது, அதிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்று சரித்திரம் படைக்கிறவர்கள் ஒரு ரகம். தோல்விகளை சந்திக்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு செல்பவர்கள் ஒரு ரகம். 

        இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில், கடந்த 2010ம் ஆண்டில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேரும், 2011ம் ஆண்டில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 585 பேரும் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டுள்ளதாக கூறுகிறது அந்த புள்ளி விவரம். 

        நாட்டில் தற்கொலை மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலம் மேற்கு வங்கம். இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. முறையே மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.  பெருநகரங்களை பொருத்தவரை சென்னை முதலிடத்தில் உள்ளது. பெங்களுரு, டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

 அதிக அளவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஆண்கள். மேலும், தற்கொலை செய்துகொள்பவர்களில் 5 பேரில் ஒருவர் குடும்பத்தலைவிகளாம். பெரும்பாலானோர், சமூக, பொருளாதார காரணங்களாலேயே தற்கொலை முடிவை நாடுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 


Monday 23 July 2012

நெருப்பு கோழி பறவையா, விலங்கா ?


    நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது அல்ல, அது விலங்கு என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சட்டசபை அறிவித்துள்ளது.
    பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் நெருப்பு கோழி பற்றி சுவாரசியமான சர்ச்சை எழுந்தது. கடைசியில் நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது அல்ல, விலங்கு இனத்தை சேர்ந்ததுதான் என்று சட்ட திருத்தம் செய்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது என்று கூறி சட்ட திருத்தத்தில் கையெழுத்திட கவர்னர் மறுத்து விட்டார். இதையடுத்து கடந்த புதன்கிழமை (18.7.2012) சட்டசபையை மீண்டும் கூட்டி நெருப்பு கோழி பற்றி விரிவாக விவாதம் நடத்தினர். கடைசியில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன், நெருப்பு கோழி விலங்குதான் என்று மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பஞ்சாப் சட்டத் துறை அமைச்சர் ரானா சனா கூறுகையில், ஆடு போன்ற விலங்குகள் பட்டியலில் நெருப்பு கோழியும் சேர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இறைச்சி பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க நெருப்பு கோழி விலங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
    உலகம் முழுவதும் இறைச்சிக்காக நெருப்பு கோழி மற்றும் அதன் இறைச்சி விற்பனை அதிகரித்து வருகிறது. நெருப்பு கோழியின் இறைச்சி உடலுக்கு நல்லது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 

நெருப்புக்கோழி சில சில சுவாரஸ்யங்கள் 

** நெருப்புக்கோழியின் எடை 60 முதல் 120 கிலோ வரை இருக்கும். இதன் உயரம் ஐந்து முதல் ஆறு அடி வரை இருக்கும். சாதாரண கோழிகளுக்கு கால்களில் நான்கு விரல்கள் இருக்கும் இதற்கு இரண்டு விரல்கள் மட்டுமே இருக்கும். இதன் ஆயுள் 68 ஆண்டுகள். 

** இது ஆண்டுக்கு 10 முட்டைகள் மட்டுமே இடும். நெருப்புக்கோழியின் முட்டைதான் உலகிலேயே மிகப்பெரியது. சாதாரண கோழி முட்டையை விட இது 40 மடங்கு பெரியது. நெருப்புக்கோழிக்கு மோப்ப சக்தியும் அதிகம். இதன் முட்டையை யாராவது தொட்டிருந்தால் கூட மோப்ப சக்தியின் மூலம் கண்டுபிடித்து விடுமாம். பின்னர், கோபத்தில் அந்த முட்டையை உடைத்து விடுமாம். அதேபோன்று இதற்கு பார்வை திறனும் அதிகம். ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களையும் பார்க்கக் கூடிய சக்தி உள்ளது. 

** நெருப்புக்கோழி மிக வேகமாக ஓடிக் கூடியவை. உறுதியான கால்களும், இரும்பு போன்ற அலகும் கொண்டது. ஒரே உதையில் மனிதனை கொல்லக் கூடிய அளவுக்கு இதன் கால்கள் வலிமையானவை. அதேபோன்று, இது தனது அலகால் கொத்தினால், மனிதனின் மண்டை ஒட்டிலேயே ஓட்டை விழுந்துவிடுமாம். 

** நெருப்புக்கோழி உப்பை மிட்டாய் போல உண்ணக் கூடியவை. மாமிச பட்சிணிகளுக்குத் தேவையான உப்பு அவற்றின் இரையின் சதையிலிருந்தும், எலும்புகளிலிருந்தும் கிடைத்து விடுகிறது. ஆனால், சாகபட்சிணிகளுக்கு தாவரங்களிலிருந்து சோடியம் குளோரைட் உப்பு கிடைப்பதில்லை. எனவே, அப்பிராணிகள் உவர் மண்ணைத் தின்று உப்பைப் பெறுகின்றன. இந்த உப்பு அவற்றின் உடலில் உள்ள அதிகப்படியான பொட்டாஷியத்தை சிறுநீர் மூலமாக வெளியே தள்ள உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. 







Friday 20 July 2012

இந்திய சினிமா 100 - 2



* இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா' 1931ம் ஆண்டு வெளியானது. அந்தப்படத்தின் கதாநாயகன் விட்டல், கதாநாயகி சுபைதா. 

இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம், 1959ம் ஆண்டு வெளிவந்த ' காகஸ் கி பூல்'

ஆஸ்கார் விருதுக்காக அனுப்பப்பட்ட முதல் இந்தியப்படம், 'மதர் இந்தியா' 

விசேஷ ஆஸ்கார் விருதுபெற்ற ஒரே இந்தியர், சத்யஜித் ரே. 

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்த முதல் இந்திய திரைப்படம், 'ருக்மாபாய் கீ ஹவேலி'

பத்மஸ்ரீ விருதுபெற்ற முதல் இந்திய நடிகை நர்கீஸ் 

இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை இடம் பூனா. இது 1964ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழின் முதல் திரைப்படமான 'காளிதாஸ்'  படத்தை இயக்கியர் எச்.எம்.ரெட்டி. இப்படம் 1937ம் ஆண்டு வெளியானது.

தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் 'கீசகவதம்' இதன் தயாரிப்பாளர், மோட்டார் கார் பாகங்களை விற்பனை செய்துவந்த நடராஜ முதலியார்.

தமிழ் திரையுலக முதல் நட்சத்திர நடிகை டி.பி. ராஜலட்சுமி 





Thursday 19 July 2012


பாலியல் குற்றத்திற்கு, ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று (19.7.2012), அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. அத்துடன், ஆசிட் வீசும் நபர்களுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும், இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

Monday 9 July 2012

கள்ளநோட்டை கண்டுபிடிக்க புதிய இணையதளம்



நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழிக்கவும், அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், ரிசர்வ வங்கி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது. இதன் மூலம் கள்ளநோட்டை முற்றிலும் ஒழித்துகட்டவும், கள்ளநோட்டுக்களை மக்கள் எளிதாக கண்டுபிடித்திடவும் முயற்சி செய்து வருகிறது. 

கள்ள நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல் ஆகும். எனவே,   கள்ள நோட்டு புழக்கத்தை ஒழித்துகட்டவும், அவற்றை எளிதாக சாதாரண மக்கள் இனம் காணவும், விழப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி, www.paisaboltahai.rbi.org.in என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது. கடந்த 2010-2011-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் புழக்கத்தில் இருந்த 6.74 மில்லியன் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்துள்ள விவரம் உள்ளிட்டவை இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. 

    ரூ. 10, 50,100, 500, 1000 ஆகிய கரன்சிகளின் வரிசைப்படி கள்ள நோட்டுகளுக்கும், ஒரிஜினல் கரன்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தினை கண்டுபிடிக்க முடியும், மேலும் கள்ளநோட்டு பற்றிய விவரங்கள் அடங்கிய குறும்படமும் காட்சியாக இடம் பெற்றுள்ளன. இவற்றினை டவுன்‌லோடு செய்து, கள்ள நோட்டினை எவ்வாறு இனம் காணலாம் என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி பாடத்திட்டத்தில் ஆர்.டி.ஐ. - மத்திய அரசு பரிசீலனை


     தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,) குறித்து, மக்களிடம்  விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காக,  இந்தச் சட்டத்தின் பல அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விவகாரங்களில், முதன்மையான நிறுவனமாகச் செயல்படும் மத்தியப் பணியாளர் நலத்துறை இதுதொடர்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (என்.சி. இ.ஆர்.டி.,) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான வரைவுத் திட்டமும் விரைவில் தயாராக உள்ளது.

     தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை, பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யும் விவகாரம், தற்போதுதான் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. என்.சி.இ.ஆர்.டி., உடன் கலந்து ஆலோசித்த பின்னரே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, மத்தியப் பணியாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு துறைகளிலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு, ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தச் சட்டம் தொடர்பான விவரங்களை இடம் பெறச் செய்யும் யோசனை உருவாகியுள்ளது.  அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.சில துறைகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் திறமைகள் எல்லாம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மூலம் தெரியவந்துள்ளன. அதனால், இந்தச் சட்ட அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டங்களில் இடம் பெறச் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்களில், இவை இடம் பெறலாம் என்றார். 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சில குறிப்புகள் 

* இச்சட்டத்தின்படி அரசு அலுவலகங்கள், அரசின் நிதி உதவிபெறும் அமைப்புகள் முதலியவை பற்றிய எந்த தகவலையும் கோரி பெற இந்திய குடிமகனுக்கு உரிமை உண்டு. 

* தகவல் கோருகிறவர், அதற்கு எந்த எவ்வித காரணமும் கூற வேண்டியதில்லை. 

* இந்தியாவில் உள்ள எந்த சட்டத்தைக்காட்டிலும் இந்த சட்டம் மட்டுமே உயர்வானது. அதாவது எந்த ஒரு சட்டத்தையும் சுட்டிக்காட்டி அரசு அலுவலர்கள் தகவல் தர மறுக்க முடியாது. 


* தமிழக அரசு அதனுடைய அலுவலகங்களில் தகவலைக் கோர ரூ. 50 கட்டணம் நிர்ணயித்துள்ளது. 

*  தகவல் கோருபவர் ரூ. 50 கட்டணம் செலுத்தி, அசல் ரசீதோடு, தான் இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரமாக குடும்ப அட்டையின் நகலையும் இணைத்து வெள்ளைத்தாளில் எழுதி விண்ணப்பித்தாலே போதுமானது. 

* ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஒரு உதவிப் பொதுத்தகவல் அலுவலரும், மேல்முறையீட்டு அலுவலர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதலில் உதவிப் பொதுத்தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

* கோரப்பட்ட தகவல்கள் 30 நாட்களில் வந்து சேரவில்லையென்றாலோ,  போதுமான தகவல்கள் இல்லையென்றாலோ, மேல்முறையீட்டு அலுவலருக்கு முதல் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். 

* மேல் முறையீட்டிலும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லையென்றால் 90 நாட்களுக்குள் மாநிலத் தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் முறை மேல்முறையீடு செய்யலாம். 

 * சரியான தகவல் தர மறுக்கும் அதிகாரிக்கு நாளொன்றுக்கு ரூ. 250 வீதம் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. தவிர அந்த அதிகாரி மேல் துறைத் தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும். 

* அச்சுத்தாள், குறுந்தகடு அல்லது மென்தகடு ஆகியவற்றையும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி பெறலாம். 

* அரசு அலுவலகங்களில் எந்த கோப்பையும் நாமே நேரடியாக பார்வையிடலாம். சான்றிட்ட நகலையும் பெறலாம். நேரில் பார்வையிடுவதற்கு முதல் ஒரு மணிநேரம் இலவசம் ஆகும். அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 5 கட்டணம் செலுத்த வேண்டும். 

* மத்திய அரசைப் பொருத்த வரை தகவல் அறிய ரூ. 10 கட்டணம் செலுத்தினால் போதுமானது. 

* தகவல் பெற விரும்புபவர் ஊரில் உள்ள தலைமை அஞ்சல் நிலைய தலைவரிடம் விண்ணப்பித்தால் போதுமானது. அவர் உரிய அலுவலகங்களுக்கு அனுப்பித் தகவல் பெற்றுத் தருவார். 

* தகவல் பெறுவதற்காக கட்டணத்தையும் ரொக்கமாக அந்ததந்த அஞ்சல் நிலையத்திலேயே செலுத்தி ரசீது பெறலாம். 

Sunday 8 July 2012

தூக்கம் உங்கள் கண்களை தழுவட்டுமே




     மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது.
ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம்.  இது  நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கு போதுமான முக்கியத்துவம் தரும் நம்மில் பலர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை.  முறையான தூக்கம் இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் என பல்வேறு உடல் நலப்பிரச்னைகள் தோன்றும். எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் தெளிவான வரைமுறை இல்லை என்றாலும்,  ஐந்து மணி நேரம், எட்டு மணி நேரம் என சரியான தூக்க அளவுகளாக பல்வேறு நேரங்களைக் குறிப்பிடுகின்றனர். உண்மையில் மறு நாள் காலையில் எழுகையில் சுறுசுறுப்பாய் இருக்க முடிந்தால் அதுவே சரியான அளவு தூக்கம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள். 

படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்

     படுத்த நில நிமிடங்களிலேயே தூங்கிப்போவது ஒரு வரம். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. சிலருக்கு படுத்த பின்னரும்,  நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100.... 200..... 300 வரை எண்ணத் துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இப்படி எண்ணுவதற்கு 'கௌண்டிங் ஷீப்' என்று பெயர். இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது என்கிறது ஓர் ஆய்வு. அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம். சுவாரசியமாக, இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக கிரீச்சிடும் பறவைகளின் ஒலிகள். மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுபவையாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக, இருக்கவே இருக்கிறது பழமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும் தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானது தான். துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறவர்களும் இருக்கிறார்கள். விசித்திரமாக, கடிகாரத்தின் டிக் டிக் ஒசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. இவையத்தனைக்கும் வில்லனாக இருப்பது பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை சத்தம் என்று ஆத்திரப்படுகிறார்கள் உண்மையில் பாதிப்புக்குள்ளானவர்கள்.

      குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இதைத்தான் நாம் குறட்டை என்கிறோம். உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது

     தூங்குவதில் பல ரகம் உண்டு. சிலர் அடித்து போட்டது போல் தூங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர். குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம். பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. 

குறட்டையை தவிர்க்க சில வழிகள்

1. குறட்டையை தவிர்க்க சி.பி.ஏ.பி. என்ற கருவி உள்ளது. இந்த கருவி தொடர்ச்சியாக காற்றினை சுவாசத்தில் பங்கு பெற செய்கிறது. காற்று எளிதாகவும், தொடர்ந்தும் உட்செல்வதற்கு ஏற்ற வகையில் செயல்படுகிறது. இதனால் தூக்கம் தடைபடுவதில்லை. எனினும் இந்த கருவிகளின் விலை அதிகம் கொண்டவை.

2. சிலர் தூங்கும் போது வாய் திறந்த நிலையில் இருக்கும்.  ஏனெனில் அவர்கள் காற்றினை வாய் வழியாகவும் சுவாசத்திற்கு எடுத்து கொள்வதால் நடைபெறும் ஒன்று. இதற்கென கவசம் போன்ற கருவி ஒன்று உள்ளது. இதனை பொருத்தி கொள்வதால் தூங்கும் போதும் வாயானது திறந்த நிலையில் இருக்கும். இதனால் சுவாசம் நன்கு நடைபெறும்.

3. உங்களது கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தால் பெரும்பாலும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும். காற்று மூச்சு குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்கும். எனவே தூங்கும்போது கைகளை முகத்திற்கு எதிராக வைத்து கொள்ளவும். பின்னர் தலையினை கையின் உதவியால் எதிர்புறம் திருப்பவும். இந்த முறையை தலையின் இருபுறமும் செய்யவும். சிறிது நேர இடைவெளி விட்டு இதனை தொடரவும். இதேபோல் தலையை மேல் மற்றும் கீழ் திசைகளில் திருப்பவும். இதற்கும் சற்று இடைவெளி விடுதல் அவசியம். இவ்வாறு தூங்கும் முன் படுக்கையறையில் சிறிது நேரம் தொடர்ந்து செய்து வரவும்.

4. நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.

5. சிலர் மூக்கின் வழியாக குறட்டை விடுவதும் உண்டு. இவர்கள் தூங்கும்போது வாய் வழியாக காற்றை சுவாசிக்க கற்றுகொண்டால் குறட்டையானது தவிர்க்கப்படும். அதற்கு உதவியாக மூக்கை கெட்டியாக பிடித்து கொள்ளும் கிளிப் போன்றவற்றை உபயோகிப்பதால் எளிதாக தூங்க இயலும்.

6. இந்த குறட்டையினை தவிர்ப்பதற்கு உகந்ததாக தற்போது பல சுவாச தைலங்கள் (வேப்பரப்) சந்தையில் வந்துள்ளன. இவற்றை பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் நன்றாக தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதால் சுவாசம் மேற்கொள்ளும்போது காற்றானது எளிதில் மூக்கினுள் சென்று வரும். மேலும் இது மூக்கில் தடையேற்படுத்தும் கோழை போன்றவற்றை இளகச்செய்து விடும். இதனால் சுவாசம் அமைதியாகவும், எளிதாகவும் நடைபெறும்.

7. குறட்டை விடுவதில் மூக்கின் உட்புறம் அமைந்துள்ள எலும்பு பகுதியும், சதை பகுதியும் ஒழுங்காக அது அமைய வேண்டிய இடத்தில் இல்லாமல் சிலருக்கு இடம் மாறி அமைந்திருக்கும். இதனை சிறிய அறுவை சிகிச்சையின் உதவியால் எளிதில் சரி செய்து விடலாம். குறட்டையையும் தவிர்த்து விடலாம்.

     குறட்டையை தடுப்பதற்கு பல வழிகள் உள்ள போதிலும் அவரவர்களுக்கு எது சரியாக அமையும் என்பதை மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையின் பேரில் கடைபிடித்து வருவது மிக்க நன்மை பயக்கும்.

தூக்கம் குறைவால் தாம்பத்ய வாழ்வில் பாதிப்பு ஏற்படுமாம். 

     அமெரிக்க மருத்துவ அமைப்பு ஒன்று தூக்கம் குறித்து மேற்கொண்ட ஆய்வில், வாரம் முழுவதும் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது, நீண்ட நாட்கள் குறைவான நேரமே தூக்கம் மேற்கொள்வது ஆகியவற்றால் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அளவு குறைவதாக தெரியவந்துள்ளது. இந்த ஹார்மோன் குறைவால், தாம்பத்ய ஆர்வமும் குறைந்துவிடுமாம். மேலும், தசைகளில் தளர்ச்சி, வலுவிழந்த எலும்புகள், ஆற்றல் குறைந்து போதல் மற்றும் கவனமின்மை ஆகியவை ஏற்படும் என்றும், மேலும், இதனால் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் ஏற்பட்டு இருதய வியாதிகள், ஸ்ட்ரோக் மற்றும் டையாபடீஸ் 2 ஆகியவையும் ஏற்படுகின்றன என்றும் அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளளது.  குறிப்பிடப் பட்டுள்ளது.

தூக்கத்தில் மூச்சு நின்று போவதை தடுக்கும் நவீன கருவி

     தூக்கத்தில் சிலருக்கு மூச்சு விடுவது தற்காலிகமாக நின்று விடும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது சில சமயங்களில் பல அபாய விளைவுகளை ஏற்படுத்தி விடும். இதனால் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் நீரிழிவு போன்ற வியாதிகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஸ்லீப் அப்னீ என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் இந்த வியாதி தூக்கத்தின் போது தொண்டையின் பின்புறம் அமைந்துள்ள மென்மையான திசு பாதிக்கப்படுவதால் மூச்சு குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் பின்னர் தூக்கத்தில் இருப்பவரின் மூளை விழித்து கொள்கிறது. மேலும் அவர் மூச்சு விடுவதற்காக மிகவும் சிரமப்பட்டு, மூச்சினை இழுத்து விடுகிறார். இந்த நிலை சுழற்சி முறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு 30 முறை கூட நிகழ்கிறது. குறிப்பாக இந்த தூக்கத்தில் ஏற்படும் தற்காலிக மூச்சு நிறுத்தம் 1.2 கோடி அமெரிக்கர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இது பற்றி அமெரிக்காவின் சான் டீகோ நகரில் அமைந்துள்ள கலிபோர்னிய பல்கலைகழகத்தை சேர்ந்த டாம்போர் மற்றும் அவரது குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில் 40 வயதிற்கு மேற்பட்ட 59 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்கள் தூங்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 10 முறை இந்த தற்காலிக அல்லது நிரந்தர மூச்சு விடுவது முற்றிலும் நின்று விடும் நிலை காணப்பட்டது. அத்தகையோர்க்கு சுவாசத்தை சீர்படுத்தி மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை தவிர்க்கும் சி.பி.ஏ.பி. என்ற கருவி பொருத்தப்பட்டது. அவர்கள் மூன்று வாரங்களுக்கு பிறகு நல்ல முறையில் முன்னேற்றம் கண்டனர். மேலும் அவர்களது உடல் பலமும் அதிகரித்து காணப்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. தற்போது அமெரிக்காவில் இந்த சிகிச்சை முறை நன்கு முன்னேற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

குறைந்த தூக்கம் மாணவர்களிடம் குற்ற எண்ணங்களை ஏற்படுத்துகிறதாம்

    குறைந்த அளவு தூக்கம் உடைய மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைகழகத்தை சேர்ந்த சமந்தா கிளின்கின்பியர்டு மற்றும் சக ஆய்வாளர்கள் 14 ஆயிரத்து 382 மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் ஆய்வு நடத்தினர். அவர்களில் பாதி பேர் ஆண்கள் மற்றும் மீதி பேர் பெண்கள். மேலும் அவர்களில் 63.5 சதவீதத்தினர் வெள்ளை நிறத்தவர்கள். அந்த ஆய்வில், 8 முதல் 10 மணி நேரம் வரை தூக்கம் கொண்ட மாணவர்கள் சாதாரணமாக நடந்து கொள்கின்றனர். ஆனால் 7 மணி நேரம் மற்றும் அதற்கு குறைவாக தூக்கம் கொண்ட மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபாடு நிறைந்தவர்களாக காணப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது. 




Sunday 1 July 2012

இந்திய சினிமா 100 - 1


*  1935ம் ஆண்டு தெற்கு பம்பாயில் கட்டப்பட்ட 'ரீகல் தியேட்டர்'தான் இந்தியாவின் முதல் ஏசி தியேட்டர். 

*  1934ம் ஆண்டு வெளியான 'பாக்ய சக்ரா' என்ற படத்தில் தான் முதன் முதலாக பின்னணி இசை அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படமாகும்.

*  சத்யஜித்ரேவின் கடைசிப் படம், 'அகன் துக்'

*  ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த முதல் இந்தியர், சாபு

*  நமது தேசிய கீதம் இடம்பெற்ற முதல் திரைப்படம், 'ஹம்ராஹி'

*  வரி விலக்கு பெற்ற முதல் இந்தியத் திரைப்படம், 'கப்பலோட்டிய தமிழன்' (தமிழ்)

*  இந்தியாவின் முதல் பெண் சினிமா இயக்குநர், டி.பி. ராஜலட்சுமி. இவர் இயக்கிய முதல் படம், 'மிஸ். கமலா'


*  திரைப்படம் தயாரித்த முதல் இந்தியர் ஹரிச்சந்திர சகாரம் பட்வாடிகர்

*  தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் 1960ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

*  இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுபவர், தாதா சாகேப் பால்கே.

Friday 27 April 2012


'முதலும் முடிவும்' டைட்டானிக்கின் சோக வரலாறு

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத திரைப்படம் 'டைட்டானிக்'. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நேர்த்தியாக சொல்லப்பட்ட காதல் கதை எல்லா தரப்பினரையும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.  கவர்ந்தது. கடந்த 1997ம் ஆண்டு வெளியாகி, விருதுகளையும் வசூலையும் வாரிக்குவித்த இத்திரைப்படம், டைட்டானிக் கப்பல் மூழ்கி நூறாண்டை நிறைவு செய்ததையொட்டி, தற்போது, 3 டி தொழில்நுட்பத்தில் மாற்றி வெளியிடப்பட்டுள்ளது.

டைட்டானிக் ஒரு பிளாஷ்பேக்

             வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் பயணிகளுக்கான சொகுசு கப்பலாக திட்டமிடப்பட்டுகட்டப்பட்டது.  1909ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய இக்கப்பலின் கட்டுமானப் பணிகள், 1911ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி நிறைவடைந்தது. 3 ஆயிரம் பணியாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுத்தப்பட்டனர்.

           நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், பல்துறை அரங்குகள் என, ஒன்பது தளங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த சொகுசு கப்பலின் நீளம்,  882.6 அடி, உயரம் 175 அடி எடை, 52 ஆயிரத்து 310 டன். இதில்,  2 ஆயிரத்து 435 பயணிகளுக்கும், 892 பணியாட்களுக்கும் பயணம் செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.  ஆபத்து காலத்தில் பயன்படுத்துவதற்காக,  20 உயிர்காப்புப் படகுகளும் சேர்க்கப்பட்டிருந்தன. மேம்பட்ட உயர் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கப்பல் மூழ்கவே மூழ்காது என்று கூறப்பட்டது. உலகின் முதல் நீராவிக் கப்பல் என்ற பெருமையும் டைட்டானிக் கப்பலுக்கு உண்டு. இது,1911ம் ஆண்டு  மே மாதம் 31ம் தேதி  வெள்ளோட்டமிடப்பட்டது.

  கப்பலின் பயண தேதி அறிவிக்கப்பட்டதும், ஆர்மாக பலர் போட்டிப்போட்டுக்கொண்டு பயணச்சீட்டை வாங்கினர். அப்போதே அனுமதி கட்டணம், 4 ஆயிரத்து 350 டாலர் இன்றைய மதிப்பிற்கு, 80 ஆயிரம் டாலர்.
இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகரை நோக்கி 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி புதன்கிழமை கேப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில்பெரும் ஆராவாரத்திற்கிடையே, ஆயிரத்து 343 பயணிகள் மற்றும் 885 சிப்பந்திகளை சுமந்துகொண்டு டைட்டானிக் தனது முதல் பயணத்தை உற்சாகமாக தொடங்கியது.

             புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயார்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்க்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ்டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர், 2 ஆயிரத்து 240 பயணிகளுடன் நியூயார்க் கடலலைகளின் உற்சாக தாலாட்டுடன் சென்றுகொண்டிருந்தது.

          டைட்டானிக் மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீஸ்வரர்கள் சென்றனர். பயணத்தின் ஐந்தாம் நாளானாக ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14 இல் வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. 1:45 மணிக்கு அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து டைட்டானிக்க்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி டைட்டானிக்கிற்கு வந்தடையவில்லை.

     இரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன. முதலாவது படகு காலை 12:40க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது, ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அருகில் இருந்த சில கப்பல்களுக்கு செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்க்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை.

            சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் தனது முதல் பயணத்தை நிறைவு செய்யாமலேயே தனது பயணத்தை பாதியிலேயே முடித்துகொண்டு முற்றிலுமாக மூழ்கியது. முழுவதுமாக மூழ்கும் போது, கப்பல் இரண்டாக பிளந்தது இன்னுமொரு சோகம். இந்த இடைப்பட்ட நேரத்தில், கப்பலில் இருந்த உயிர்காக்கும் படகுகளின் மூலம் பெண்கள், குழந்தைகள் என, 705 பேர் மட்டும் காப்பாற்றப் பட்டனர். கப்பல் சிப்பந்திகள் உட்பட, 1,523 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மூழ்கியவர்களில், 300 பேரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. இந்த விபத்து, அமைதிக் காலத்தில் கடலில் நிகழ்ந்த பேரழிவாக கருதப்படுகிறது.
            
              1985ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி,  அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு, பிரான்சை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்கிலிருந்து 12 ஆயிரம் 000 அடி ஆழத்தில் மூழ்கிக்கிடக்கின்றது.  இவ்வாழத்தின் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கு 6000 இறாத்தல் (2700 கிகி) ஆக உள்ளது.

        டைட்டானிக் மூழ்கியதற்கு, இன்றுவரை விதவிதமான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டு வருகின்றன. இந்த ஆர்வத்தில்தான், டைட்டானிக் பற்றி 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், நூற்றுக்கணக்கான புத்தகளுங்களும் வெளியாகியுள்ளன. நூறாண்டுகளைக் கடந்தும் இன்றும் மக்கள் நினைவுகளின் டைட்டானிக் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது.

( எல்லோருக்கும் தெரிந்த வரலாறுதான் என்றாலும், எழுதாமல் இருக்க முடியாவில்லை. எழுதியும் பதிவிட கொஞ்சம் தாமதமாகிவிட்டது.)

Thursday 26 April 2012


தமிழகம் முதலிடம்


    ஹிதேந்திரன் தமிழகத்தில் இன்று நெகிழ்வோடு உச்சரிக்கப்படும் பெயர். கடந்த 2008ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த அந்த 11ம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய அவனது பெற்றோர் முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்த தமிழகம் நெகிழ்வோடு திரும்பிப்பார்த்தது. 

      உறுப்பு தானத்தின் உன்னதத்தை, ஹிதேந்திரன் தனது மறைவின் மூலம் உணர்த்திச் சென்றதால், இன்று தமிழகம் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது. 

   தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பு தானம் தொடங்கினாலும், ஹிதேந்திரன் மூலமாகவே உறுப்பு தானம் பரவலான கவனம் பெற்றது. இதனால், உறுப்பு தானம் குறித்த செய்திகளை அடிக்கடி செய்திகளில் காண முடிகிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் உறுப்பு தானத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதே போன்று, சென்னை முதலிடத்திலும், கோவை இரண்டாம் இடத்திலும் உள்ளது.

          மருத்துவ உலகம் மனித குலத்திற்கு கொடுத்த மகத்தான கொடை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை. தினந்தோறும் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஆளில்லாத நிலையில், 15 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளி விவரம். ஒருவர் அளிக்கும் உறுப்பு தானம் மூலம், 10 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என்கிறது மருத்துவ உலகம். 

     சாலை விபத்திலோ அல்லது வேறு விதமாகவோ மூளைச் சாவு ஏற்பட்டால் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முடியும். இதற்கு இறந்தவரின் குடும்ப ரத்த உறவு உறுப்பினர்கள் சம்மதத்துடனேயே இதனை செய்ய முடியும். 

       மனித உடலில் உள்ள சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல், இதய வால்வு, எலும்பு, கருவிழி, தோல், தசை நாண் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்யலாம். தானமாக பெற்ற இதயம், ஆறு மணி நேரத்திற்குள்ளும், கல்லீரல் 8 மணி நேரத்திற்குள்ளும், சிறுநீரகம் 12 முதல் 16 மணி நேரத்திற்குள்ளும் நோயாளிக்கு பொருத்தப்பட வேண்டும். உடல் உறுப்புக்களை வாங்குவதும், விற்பதும் குற்றம். 

    உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், சர்வதேச அளவில் இந்தியா பின் தங்கியே உள்ளது. மத ரீதியான பழக்க வழக்கங்களே உறுப்பு தானத்திற்கு தடையாக உள்ளது என்று மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

Wednesday 18 April 2012

'மூழ்காத ஷிப்'





 உங்க விருப்பத்திற்கேற்ப நண்பர்கள் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


 ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட எண்ணங்களும், செயல்களும் உண்டு. நட்பு என்ற போர்வையில் நண்பனின் சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைக்காதீர்கள். 


      நண்பனுக்கு உதவுங்கள். உங்களுக்குத் தேவையெனில் அவனுடைய உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதே சமயத்தில் அளவுக்கு மீறிய உதவியை இருவருமே செய்ய முயற்சிக்காதீர்கள். 


   நண்பன் பேசும்போது வாயைத் திறக்காதீர்கள். ஆலோசனைக்கு மட்டுமே வாயைத் திறக்கவும். 


       நண்பன் இல்லாத நேரத்தில் அவனைப்பற்றி நீங்கள் பேசவோ அல்லது மற்றவர் பேசவோ அனுமதிக்காதீர்கள். 


    நண்பனின் வெற்றியைக் கொண்டு பெருமைக் கொள்ளுங்கள். 


    திறந்த மனத்துடன் பாராட்டுங்கள். 


   திறந்த மனமே நட்புக்கு அடையாளம். நண்பனின் மேலுள்ள கோபத்திற்கு திரை போடாதீர்கள். முகத்திற்கு நேரே கூறிவிடுங்கள். 


        நண்பர்களிடையே பேதம் கிடையாது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்பதெல்லாம் நட்புக்குக் கிடையாது. எனவே நண்பனைத் தாழ்வாகவோ, உயர்வாகவோ எண்ணாதீர்கள். 


   குறைபாடுகள் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்கிறோம். என்பதை நினைவில் கொண்டு, நண்பனின் குறைகளை பெரிது படுத்தாதீர்கள். 

       
          அப்புறம் என்ன.. என்றும் 'மூழ்காத ஷிப்' பிரண்ட் ஷிப் தான். 


( பத்தாண்டுகளுக்கு முந்ததைய வார இதழ் ஒன்று படிக்கக் கிடைத்தது. அதில், பளிச்சென்று கண்ணில்பட்ட விஷயம் இது. உங்களுக்கு எந்த விதத்திலாவது பயன்படுமானால் மகிழ்ச்சி. )

Tuesday 20 March 2012

இந்திய சினிமா


பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்திய சினிமாவுக்கு நூற்றாண்டு தொடங்குவதால் சேவை வரி ரத்து செய்யப்படுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்தாலும் அறிவித்தார். அன்றிலிருந்து சினிமாவைப் பற்றி ஏதாவது எழுதியே தீருவது என்று மண்டையை பிறாண்டிக் கொண்டிருந்தேன். அப்புறம் அங்குமிங்குமாக தேடி கிடைத்த கொஞ்சுண்டு தகவல்கள் உங்கள் பார்வைக்காக. 
   இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் தாதா சாகேப் பால்கே என்பவரால் 1913 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'ஹரிச்சந்திராஆகும்இதற்கு முன்பே கூட இந்தியாவில்திரைப்படங்கள் வந்திருந்தன1865 ஆம் ஆண்டு முதல் அசையும் படங்கள் வெளிவந்திருந்தனஆனால்இவைகள் துண்டுப்படங்களாகும்ஹரிலால் சென்தானேவால் ஆகியோர்மும்பையிலும்கொல்கத்தாவிலும்சிறிய படங்களை தயாரித்தனர்வங்க மொழியின் முதல் திரைப்படம் 'சத்யாபாபு ஹரிச்சந்திரா' 1917 ஆம் ஆண்டு வெளிவந்ததுதமிழின் முதல் படம்'கீசகவதம்' 1919 ஆம் ஆண்டு வெளிவந்தது.
          1920 ஆம் ஆண்டுகளில்தீரன் கங்கூலிபாபுராவ் பெயிண்டர்அசெத்திங்சந்துலால்ஷாராணிவி.சாந்தாராம் போன்ற திரைப்பட இயக்குநர்கள் 'இங்கிலாந்து ரிடர்ண்டு, 'சங்காரிபாஷ்', 'குணசுந்தரிபோன்ற பல திரைப்படங்களை உருவாக்கினர்.
           ஊமைப்படக் காலக்கட்டத்தில் இருந்து முதல் பேசும் படமாக உருவானது 'ஆலம் ஆராதான்இதுவே இந்தியாவின் முதல் பேசும் படமாக 1931 ஆம் ஆண்டு வெளிவந்ததுஇந்தகாலக்கட்டத்தில் தான் வங்காளத்திலும்தென்னிந்தியாவிலும் பேசும் படங்கள் உருவாக்கப்பட்டனவங்காளத்தில் 'ஜமாய்ஷாஸ்திதெலுங்கில் 'பக்த பிரகலாதா', தமிழில் 'காளிதாஸ்',முதல் படங்களாக வெளிவந்தன.
           திரைப்பட வளர்ச்சி 1930 ஆம் ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் கண்டதுபக்திபுராணக்கதைகளுடன் கூடிய படங்களுடன்சமுதாய உணர்வுள்ள படங்களும் வெளியாயின.சாந்தாராமின் 'துனியாநாமானே', 'ஆதீமிபதேஹாலின் 'சாந்தாதுக்காராம்மற்றும் பல பொழுதுபோக்கு படங்கள் வந்தன.
            இந்தியாவின் முதல் வண்ணப்படம் அர்தேஷிர் ராணியின் 'கிஸபின் கன்னியாஎன்ற திரைப்படமாகும்இது 1937 ஆம் ஆண்டு வெளியானதுஇதே காலத்தில்மராத்திகுஜராத்தி,கன்னடம்ஒரியாஅசாமிபஞ்சாபிமளையாள மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகின.

தமிழ் சினிமா
விக்டோரியா பப்ளிக் ஹால்  
        1897 ஆம்  ஆண்டு சென்னையில் ரிப்பன் மாளிகைக்கு அடுத்திருந்த 'விக்டோரியா பப்ளிக் ஹாலில் 'எட்வர்ட்என்ற ஆங்கிலேயர் 'புகை வண்டியின் வருகை, ' தொழிற்சாலையை விட்டு..'போன்ற சில நிமிடங்களே ஓடக்கூடிய மௌன துண்டுப்படங்களை போட்டுக்காட்டினார்இதுதான் தமிழகத்தில் காட்டப்பட்ட முதல் சினிமா.
      

              ஆரம்பகாலத்தில்,பயாஸ்கோப்,கினிமோட்டோபிராஃப்மோட்டோ போட்டோஸ்கோப்சினிமோட்டோகிராஃப் என்று பலவிதமான பெயர்களில் வழங்கப்பட்டுகடைசியாகலூமியர்சகோதரர்கள் சூட்டிய சினிமோட்டோ கிராஃப் என்ற பெயர்தான் நிலைத்தது.
                    தெரு ஓரங்களிலும்பூங்காக்களிலும் வெவ்வேறு இடங்களில் சலனப்படம் காட்டப்பட்டு வந்த காலக்கட்டத்தில், 'வார்விக் மேஜர்என்ற ஆங்கிலேயருக்கு நிரந்தரமாக ஒரே இடத்தில்படம் காட்டினால் என்ன என்று தோன்ற, 1900 ஆம் ஆண்டுசென்னையில் 'எலெக்ட்ரிக் தியேட்டர்என்ற சினிமா கொட்டகையை கட்டினார்இதுதான் தென்னிந்தியாவின் முதல்தியேட்டர் ஆகும்.
                         திருச்சியில் ரயில்வேயில் வேலைப்பார்த்து வந்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவருக்கு சினிமா தொழில் மீது ஆர்வம் ஏற்பட்டுபுரொஜக்டரையும்சில துண்டு படங்களையும்விலைக்கு வாங்கி திரையிட்டுக் காட்டத்தொடங்கினார்.  அந்த வகையில்சலனப்படங்களை காட்டிய முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவரானார்அதேபோல் சென்னையில்போட்டோ கிராபராக இருந்த வெங்கையா என்பவரும் துண்டுப்படங்களை வாங்கிஊர் ஊராக போய் படங்களை திரையிட்டுக்காட்டினார்.
                     பின்னர்வெங்கைய்யா 1913 ஆம் ஆண்டு சென்னையில் 'கெயிட்டிதியேட்டரை கட்டினார்இந்தியர் ஒருவரால்தென்னிந்தியாவில் கட்டப்பட்டமுதல் தியேட்டர் இதுதான்.இதனைத்தொடர்ந்து, 1914 ஆம் ஆண்டு வடசென்னை தங்கசாலையில் 'கிரௌன்தியேட்டரையும், 1915 ஆம் ஆண்டு 'குளோப்' (ராக்சிதியேட்டரையும் கட்டினார்.
                         சென்னையில் மோட்டார் வியாபாரம் செய்துவந்த நடராஜ முதலியார் என்பவருக்கு நாமே படம் தயாரித்தால் என்ன என்று தோன்றியது.  எனவே, 'ஸ்டூவர்ட் ஸ்மித்என்றஆங்கிலேயரிடம் கேமராவை கையாளும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, 1916 ஆம் ஆண்டு இந்தியா பிலிம் கம்பெனி'  என்ற தென்னிந்தியாவின் முதல் ஸ்டுடியோவை உருவாக்கி,அதில்,முப்பத்தைந்து  நாட்களில்தென்னிந்தியாவின் முதல் சலனப்படமான 'கீசகவதம்தயாராகி வெளிவந்தது1932 ஆம் ஆண்டு மைசூரில் தயாரிக்கப்பட்ட 'பாக்ய சக்ராதான்தென்னிந்தியாவின் கடைசி மௌன படமாகும்.
                   1931 ஆம் ஆண்டு 'சாகர் மூவி டோன்என்னும் மும்பை கம்பெனி 'குறத்தி பாட்டும்டான்சும் என்று பேசும் குறும்படத்தை தமிழில் முதன் முதலாக தயாரித்ததுஅதே ஆண்டில்முதல்முழு நீளத் தமிழ்ப் படமான 'காளிதாஸ்மும்பையில் தயாரிக்கப்பட்டது.
                    1934 ஆம் ஆண்டு .நாராயணன் என்பவர் சென்னையில், 'சீனிவாசா சினிடோன் என்ற தென்னிந்தியாவின் முதல் டாக்கி ஸ்டுடியோவை தொடங்கி,தென்னிந்தியாவின் முதல் பேசும்படமான 'சீனிவாச கல்யாணம்படத்தை தயாரித்து வெளியிட்டார்.