Sunday 13 August 2017

மூன்று ரொட்டிகள் கொடுத்தவன்


   இரவு நேரம். ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். பலத்த மழை பெய்து கொண்டிருந்த து. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா?” என்று கேட்டார்.

      “அதற்கென்ன? தாராளமாய் தங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள் இருவரும். சிறிது நேரம் கழித்து, “ எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?”  என்றார் வந்தவர்.

           முன்னவர் இருவரில்  ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது?” என்றார். இரண்டாமவர், “ என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர், “ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்?” என்றார். 

            மூன்றாம் நபர், “ இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்.


                      ‘இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள். 

         பொழுது விடிந்தது. மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, “உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணங்களை இருவரிடம் கொடுத்து, “நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

          மூன்று ரொட்டிகளை கொடுத்தவர், “அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்வர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள், ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.

          மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது! என்றாலும் பரவாயில்லை. சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

           சுமுகமான முடிவு எட்டாத்தால் வழக்கு அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. சற்று நேரம் யோசித்த அரசன், இருவரையும் அழைத்தான். மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுக்குமாறு உத்தரவிட்டான்.

       ஒரு காசு வழங்கப்பட்டவர், “மன்னா! இது அநியாயம். அவரே எனக்கு மூன்று கொடுத்தார். நீங்கள் எனக்கு ஒரே ஒரு காசு கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளீர்களே?” என்றார்.

           அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது ரொட்டித் துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத் துண்டுகள்தான் கிடைத்தது. ஆக நீ  தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார்.  

         மூன்று ரொட்டிகள் கொடுத்தவர், வேறு வழியின்றி கொடுத்த தை பெற்றுக்கொண்டு நகர்ந்துவிட்டார். 

2 comments:

  1. நல்ல நீதிக் கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. மண்டை குழம்புகிறது.

    நாம் நினைப்பதற்கும் நடப்பதற்கும் எதுவுமே சம்பந்தம் இல்லாமலே சூழ்நிலைகள், திட்டங்கள், எதிர்பார்ப்புகள் மாறுகின்றன.

    நல்ல நீதிக்கதை.
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஆரோக்கியதாஸ்.

    ReplyDelete