Monday 19 May 2014

முத்துக் கதை 2

அன்பை அடையும் வழி!
 ஒரு முனிவரிடம், ஒரு பெண் வந்து தன் கணவன், கொஞ்ச நாட்களாகத் தன்னிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என்று கூறி அதைச் சரிசெய்ய மருந்து ஏதாவது தரும்படி கேட்டுக் கொண்டாள்.
 முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அப்படி ஒரு மருந்து தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

 மறுநாளே அப்பெண் காட்டுக்குச் சென்றாள். ஒரு புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்துபோய் வீடு திரும்பி விட்டாள். மறுநாளும் காட்டுக்குச் சென்றாள். அதே புலியைக் கண்டாள். அப்போதும் உறுமியது. ஆனால் அன்று பயம் சற்றுக் குறைவாக இருந்தது.
 ஆனாலும் திரும்பி விட்டாள்.
 அவள் தினந்தோறும் காட்டுக்குள் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்துவிட்டது. ஒருநாள் புலியின் ஒரு முடியை எடுக்கவும் முடிந்தது.
 அந்தப் புலியின் முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டுவிட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.
 முனிவர் அவளைப் பார்த்து, ""இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படிப் பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?'' என்று கேட்டார்.
 முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது. மனத்தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.


No comments:

Post a Comment