Friday 2 March 2012

உலக பெண்கள் தினம்


     வாழ்வோடும் வரலாற்றோடும், இணைந்திருப்பவள் பெண். தாய், மனைவி, சகோதரி, மகள் என்ற வடிவங்களின் பெண்ணின் அண்மை மனிதனுக்கு தேவைப்படுகிறது. மனிதன் மட்டுமல்லாமல் இறைவனுக்கும் பெண் தேவைப்படுகிறாள். வேத காலத்தில், பெண்களின் நிலை மேம்பட்டிருந்தது. அவள் தத்துவாதியாக இருந்தாள். குருகுலத்தில், ஆண்களுக்கு இணையாக கல்வி கற்றாள். சங்காலத்தில், கவிதை இயற்றினாள். மண்ணாசையால், மன்னர்களுக்கு இடையே, மூள இருந்த போர்களை தடுத்து நிறுத்தினாள். புலியை முறத்தால் விரட்டும் அளவுக்கு வீரத்தையும் பெற்றிருந்தாள். ஆனால், சங்க காலத்தின் கடைசியில், பெண் அடுக்களைக்கு தள்ளப்பட்டாள். கதவிடுக்கின் வழியே தான் அவள் உலகத்தை தரிசித்தாள். கல்வி மறுக்கப்பட்டது. போகப்பொருளாகவும், பிள்ளை பெறும் இயந்திரமாகவும் பயன்படுத்தப்பட்டாள். கணவன் மரணித்தபோது, கட்டாயமாக உடன்கட்டை ஏற்றப்பட்டாள். இந்த நிலையை மாற்ற இராஜாராம் மோகன்ராய்களும், பெரியார்களும் போராடியதன் விளைவாக, இன்றைக்கு பெண் அடுக்களையில் இருந்த வீட்டின் வரவேற்பரைக்கு வந்திருக்கிறாள். உலகம் முழுவதும் வரும் 8 ம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம் தோன்றியது எப்படி என்று தேடியபோது கிடைத்த தகவல்கள் உங்கள் பார்வைக்காக. 


     ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். ஆனால்,  அந்நாட்டு அரசன் லூயிஸ் பிலிப் தன்  அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான். 

     ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். 

     இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த நாள்தான், அனைத்துலக பெண்கள் நாள் கொண்டாட ஒரு வித்தாக அமைந்தது.ஆனால், அந்த வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. 

     1869 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், ஜான் ஸ்ட்வார்ட் மில் என்ற உறுப்பினர், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார். ஆனால், உலகில், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றது. 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி, பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் தேர்தல் சீர்திருத்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். ஆனால், மற்ற நாடுகளில் இந்த உரிமையை பெறுவதற்கு பெண்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது. 

     அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகரான நியூயார்க்கில், பெண்கள் நெசவுத் தொழிலில் பெருமளவு ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்துவந்தது. . 1857 இல் நியூயார்க்கில்  உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு நிலைகுலைந்து போனார். 

     போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவாக,  1910 ஆண்டு, கோபன்ஹேகனில் அனைத்துலக உழைக்கும் பெண்களின் இரண்டாவது மாநாடு மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி,ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். 1913 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

     1909 ஆம் ஆண்டு, பிப்ரவரி 28 ஆம் தேதி,  அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். 1911 ஆம் ஆண்டு, மார்ச் 25 ல் நியூயார்க்கில், ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவமே, அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய காரணமாகியது . தொடர்ந்து அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.

     1913-14-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.


     பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

     ரஷ்யாவில், 1917 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி, சரியான உணவுகொடுக்கவில்லை என்பதற்காக, ரஷ்யாவில் நெசவுத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மற்ற நகரங்களுக்கும் பரவியது. நாடெங்கும் ஊர்வலம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சியே பின்னாளில், ரஷ்ய புரட்சிக்கு வித்திட்டது.


     பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் முதலில் பெண்கள் உரிமைக்காக 1909 ஆம் ஆண்டு குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில், சோஷலிஷ கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமெண்ட்  ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிப்ரவரி 28 ஆம் தேதி பெண்கள் தினம் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. 

     பின்னர், கோபன்ஹேகனில் 1910 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாகப் பேசப்பட்டது. அப்போது சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுமாறு பலநாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த வேண்டுகோளின்படி, 1911 இல் மீண்டும் விவாதிக்கப்பட்டது. இதனை ஏற்று மார்ச் 19 ஆம் தேதி முதன்முறையாக பெண்கள் தினத்தை கொண்டாடின. அன்றைய தினம், பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு  செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்துகொண்டன. 
அதன்பின் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் 1913 ஆம் ஆண்டு ஓன்று கூடி, மார்ச் 8 ஆம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இதுதொடர்பாக, ஐ.நா. சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 ஆம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது. 

     அதன் பின்னரும், பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு உரிய உரிமை, சலுகை எதுவும் கிடைக்கவில்லை. 1946 இல் தான், பெண்கள் ஓரளவு உரிமை பெறத்தொடங்கினர் என்று அங்கீகரித்து, அதுமுதல் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

''எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி'' - பாரதியார் 



1 comment:

  1. நல்ல பகிர்வு..... வாழ்த்துகள்...

    ReplyDelete