Sunday 15 March 2015

தெரியுமா இவரை - 4 மார்க்கோனி

வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்தவர் மார்கோனி. 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் அவர் 1874-ம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார். அவரது இயற்பெயர் குலீல்மோ மார்க்கோனி. 

தந்தை தனவந்தர். எனவே மார்க்கோனிக்கு மிகச்சிறந்த கல்வி கிடைத்தது. வீட்டிலேயே தந்தை உருவாக்கி வைத்திருந்த நூலகம், அவா¤ன் பார்வையை விசாலப்படுத்தின. சிறு வயதிலேயே மார்கோனிக்கு மின்சக்தி ஆய்விலும், இயற்பியலிலும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. எனவே வீட்டுப் பரணில் சிறு ஆய்வுக் கூடத்தை நிறுவி ஆய்வுகளை மேற்கொண்டார். 

தமது 20-ம் வயதில், கம்பியில்லாமல் ஒலி அலைகளை அனுப்பும் ஆய்வு குறித்து படிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அது அவருக்கு உந்துதலாக இருக்கவே, அதைப்பற்றி தொடர்ந்து  ஆய்வுகள் மேற்கொண்டார். அதன் பயனாக, ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தியை அதாவது டெலிகிராப் அனுப்பும் முறையை உருவாக்கினார். 

அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரை கேட்டு 1896-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி. இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அஞ்சல் துறை அவரது கண்டுபிடிப்பை வரவேற்று அறிமுகம் செய்தது. அதே ஆண்டு தனது கண்டுபிடிப்பான கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.

ஒலி அலைகளை வானில் உலா வரச்செய்ய முடியும் என்று நம்பிய மார்க்கோனி அதனை சோதித்துப் பார்க்க, பலூன்களையும், பட்டங்களையும் பறக்க விட்டு அவற்றிலிருந்து சமிக்ஞைகளை பெற முடியுமா என்று சோதித்தார். அதில் வெற்றி கிடைக்க, பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில் ஒன்பது மைல் சுற்று வட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். 

1899-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒன்றும், இங்கிலாந்தில் ஒன்றுமாக இரண்டு கம்பியில்லா தொலைத் தொடர்பு நிலையங்களை உருவாக்கினார் மார்கோனி. 31 மைல் இடைவெளி இருந்த இரண்டுக்குமிடையே ஆங்கில கால்வாய்க்கும் மேலே வெற்றிகரமாக தகவல் பரிமாற்றத்தை செய்து காட்டினார். அவர் உருவாக்கிய கருவிகள் போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்பட்டன. அதன் மூலம் 75 மைல் சுற்றளவில் செய்தி பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. 


1901-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ஓர் அபூர்வமான உண்மையை நிரூபித்துக்காட்டினார் மார்க்கோனி. உலகம் உருண்டை என்பதால், வானொலி அலைகள் 200 கிலோ மீட்டர் வரைதான் பயணிக்கும் என்று அப்போது நம்பப்பட்டது. உலகின் உருண்டை வடிவத்திற்கும் வானொலி அலைகளின் பயணத்திற்கும் தொடர்பு இல்லை என்று நம்பிய மார்க்கோனி, அன்றைய தினம் செயிண்ட் ஜான்ஸ் தீவில் உள்ள ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு ஹெட்போன் கருவியை அணிந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டிருந்தார். 2100 மைல் தொலைவுக்கு அப்பால் இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியிலிருந்து அவருக்கு மாஸ்கோட் மூலம் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன.


தந்தி இல்லாமலேயே காற்றில் உலா வந்த அந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் ஒலித்தன. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும் என்பதை அந்த சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி. மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கம்பியில்லா தந்தி முறையை நிறுவிக் கொடுத்தார். அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம் எல்லாம் மாஸ்கோட் எனப்படும் குறியீட்டு முறையில் இருந்தன. அதே அடிப்படையில் மனித குரலையும் அனுப்ப முடியும் என்று நம்பிய மார்க்கோனி 1915-ஆம் ஆண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஐந்து ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1920-ஆண்டின் தொடக்கத்தில் நண்பர்கள் சிலரை தாம் தங்கியிருந்த படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பபட்டது. வானொலியும் பிறந்தது. தொடர்ந்து அவர் செய்த ஆய்வின் காரணமாக 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்புவதில் மகத்தான சாதனை புரிந்த மார்க்கோனிக்கு 1909-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

வானொலி என்ற சக்தி வாய்ந்த ஊடகத்தை உலகுக்குத் தந்த மார்க்கோனி 1937-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள் தமது 63-ம் வயதில் ரோம் நகரில் காலமானார். 

No comments:

Post a Comment