Monday 23 March 2015

மேற்குத் தொடர்ச்சி மலை - சிறுகுறிப்பு

இமயமலையைவிட வயதில் மூத்தது, ஆறு மாநிலங்களை கடந்து, 1600 கி.மீ. தூரம் நீண்டு, அதிசயங்களையும், பொக்கிஷங்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. 
அரிய வகை தாவரங்கள், அபூர்வ உயிரினங்கள், ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற கோடை வாசஸ்தலங்கள், சபரிமலை, பழநி ஆன்மீகத் தலங்கள் என ஏராளமான அம்சங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உண்டு. இந்த பெருமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு, மேற்குத் தொடர்ச்சி மலையை பாரம்பா¤ய சின்னமாக அறிவித்துள்ளது.

குஜராத்தின் தாபி பள்ளத்தாக்கில் தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம்,  கேரளா, தமிழ்நாடு வழியாக இந்தியாவின் தென் கோடியான கன்னியாகுமரியில் முடிகிறது மேற்கு தொடர்ச்சி மலை. 6 மாநிலங்களை தாண்டி மொத்தம் ஆயிரத்து 600 கி.மீ. தூரம் நீண்டு 1 லட்சத்து 74 ஆயிரத்து 700 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. 

மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இது 'சாயத்ரி மலை' எனவும், தமிழகத்தில் பொதிகை மலை, ஆனைமலை, நீலகிரி மலை எனவும், கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் மிக உயரமான சிகரமாக கேரளாவில் உள்ள ஆனைமுடி விளங்குகிறது. 2 ஆயிரத்து 695 மீட்டர் உயரத்தில் உள்ள இதுதான் 

இந்த மலை 'கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி' என்கின்றனர் புவியியல் வரலாற்று அறிஞர்கள்.  பண்டைய காலத்தில் இந்த மலை தற்போதைய ஆப்ரிக்கா, மடகாஸ்கர், செஷல்ஸ் தீவுகளுடன் இணைந்திருந்தது. 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் மாற்றம் ஏற்பட்டபோது கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென்னிந்திய பகுதிகள், ஆசிய கண்டம் நோக்கி இடம் பெயர்ந்தன. இதோடு 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவான புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலை என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு, காலப்போக்கில் அங்கு அரிய தாவரங்கள், உயிரினங்கள் உருவாக காரணமாக அமைந்தது. இங்குள்ள பல ஆயிரம் வயதுள்ள அடர்ந்த சோலை காடுகளை போன்று உலகில் வேறு எங்கும் காண முடியாது.

இந்த மலையில் உருவாகும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி போன்ற பெரிய ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றன.  பல்வேறு சிறிய ஆறுகள் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன. அதில் சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கல்லாறு, பெண்ணாறு, பெரியாறு ஆகியவற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டு, நீர் பாசனத்துக்கும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள கோபாளி, கோய்னா, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணசாகர், கேரளாவின் பரம்பிக்குளம், தமிழகத்தில் மேட்டூர் ஆகிய பெரிய அணைகள் முக்கியமானவை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, மிளா போன்ற மிருகங்கள், மான், சோலை மந்தி, சிங்கவால் குரங்கு, வரையாடு உள்ளிட்ட 139 வகையான பாலூட்டி இனங்கள், 508 வகை பறவைகள், நிலத்திலும் நீரிலும் வாழும் 176 வகை உயிரினங்கள் உள்ளன. இவற்றில் 119 வகை பட்டாம்பூச்சிகள், பறக்கும் அணில், பறவை கீரி போன்ற அரிய உயிரினங்களும் அடங்கும்.

இந்த மலையில் தேக்கு மரக்காடுகள் அதிகம் உள்ளன. தேக்கடி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களில் பூக்கும் மலர்கள், மலையின் அழகை ரம்மியமாக்குகிறது. தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள், ஏலக்காய், மிளகு போன்ற பணப் பயிர்கள் விளைகின்றன. 

அரபிக் கடலிருந்து வீசும் குளிர்ந்த காற்று, மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி மழை தருகிறது. இதுதான் தென்மேற்கு பருவ மழையாகும். இந்தியாவின் 40 சதவீத நீர்த் தேவையை பூர்த்தி செய்வது மேற்குத் தொடர்ச்சி மலை. தென்னிந்தியாவின் நீர் ஆதாரமே இந்த மலைதான். 

பத்ரா, பீமா, சாலக்குடி, சித்தாறு, கோதாவரி, கபினி, காளி, கல்லாயி, காவிரி, கோய்னா, கிருஷ்ணா, குண்டலி, மகாபலேஷ்வர், மலபிரபா, மணிமுத்தாறு, நேத்ராவதி, பச்சையாறு, பரம்பிக்குளம், வைகை, பெண்ணாறு, சரஸ்வதி, சாவித்ரி, ஷராவதி, தாமிரபரணி, தபதி, துங்கா, வீணா ஆகியவை மேற்குத் தொடரச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள். 

குற்றாலம், அகஸ்தியர், சுருளி, அப்பே, சுஞ்சனா சுட்டே, சோகக், சாலக்குடி, கல்கட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சி என இந்த மலை தொடர்ச்சியில் உள்ள அருவிகளின் பட்டியல் நீளமானது. கோவா, பாலக்காடு போன்ற கணவாய்களும் இதில் அடக்கம். 

சபரிமலை ஐயப்பன் கோயில், பழநி மலை முருகன் கோயில், கற்புக்கரசி கண்ணகி கோயில் போன்ற ஆன்மீகத் தலங்களும் இந்த மலைத்தொடரில் அமைந்துள்ளன. மலைகளின் அரசியான உதகை, மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல், ஏழைகளின் உதகை எனப்படும் ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களும், சுற்றுலா பயணிகளை கவரும் தேக்கடியும் இதில் அமைந்துள்ளன.

களக்காடு முண்டந்துறை, பிடிஆர் புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், அகத்தியமலை, நீலகிரி உயிர்க்கோள காப்பகம் மற்றும் இந்திரா காந்தி தேசிய பூங்கா, பந்திப்பூர் உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களும் ஸ்ரீவில்லிபுத்தூர், தலைக்காவிரி, வயநாடு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் காட்டுயிர் வாழ்விடங்கள் மற்றும் பறவைகள் வாழ்விடங்களும் அமைந்துள்ளன.

அமேசான் காடுகள், கிழக்கு இமயமலை உட்பட உலகின் பல்லுயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் 18 காடுகளுள் மேற்குத் தொடர்ச்சி மலைக்குத் தான் முதலிடம். 1,00,080 சதுர கி.மீ. பரப்பளவுக்குள் விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள், இந்திய நிலப்பரப்பில் ஆறு சதவீதம். இந்தியாவின் 30 சதவீத வன உயிரினங்கள், 14 தேசிய பூங்காக்கள், 44 வன உயிரினச் சரணாலயங்கள் மேற்கு மலைத் தொடர்ச்சிக்குள் அடக்கம். 

No comments:

Post a Comment