முன், பின் நவீனத்துவம் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. அதற்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமும் இல்லை. பொழுது போகாமல் மளிகை கடை அண்ணாச்சி கட்டிக்கொடுத்த பொட்டல காகிதத்தை திருப்பி பார்த்தபோது கண்ணில் பட்டது இது. உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.
எழுத்தாளர்களுக்கு லூயிஸ் ஜாரா என்ற எழுத்தாளர் சொன்ன 10 குறிப்புகள்
1. பணப்பெட்டியில் ஒரு காதை வைத்துக்கொண்டு எழுதாதீர்கள். காசு குலுங்கும் சப்தம் உங்கள் உரைநடையின் சந்தத்தை மறைத்துவிடும்.
2. உங்கள் வாசகனை வெறுக்காதீர்கள். சில சமயம் அவன் உங்களுக்கு வழிகாட்டலாம்.
3. வாசகனை உங்களுக்கே புரியாத பெரிய வார்த்தைகளால் குழப்பாதீர்கள்.
4. மற்றவர்களின் வெற்றிக்கு ஆசைப்படாதீர்கள். அவன் நடையையோ, கருத்துக்களையோ, பாத்திரப்படைப்பையோ, ராயல்டியையோ எதையும் விரும்பாதீர்கள்.
5. உங்கள் மொழிக்கு மரியாதை கொடுத்து உண்மையாக எழுதுங்கள். உங்கள் வார்த்தைகளை தேர்ந்த தச்சன் போல இழைக்கப் பழகுங்கள்.
6. புகழைத் துரத்தாதீர்கள். புகழ் உங்களைத் தேடி வரவேண்டும். பேராசை இல்லாதவர்களை புகழ் மெல்லத்தான் தேடி வரும். ஆனால், நீண்டநாள் உங்களுடன் வசிக்கும்.
7. உங்களுக்கு முன் எழுதிய பெரிய எழுத்தாளர்களை வெறுக்காதீர்கள். அவர்களை கண்மூடித்தனமாக உபாசிக்கவும் வேண்டாம்.
8. இலக்கியத்தை காப்பாற்ற வந்த அவதார புருஷராக நடிக்காதீர்கள். திறமையின் விதைகள் கடல் மணல் போல பல்லாயிரம் வகையில் மலர்ந்து காளான்களைக் காட்டிக்கொடுத்துவிடும்.
9. உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையைப் புறக்கணிக்காதீர்கள். அதில்தான் உங்கள் எழுத்தின் ஊற்று இருக்கிறது.
10. ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழுதுங்கள். அதன் தரத்திலிருந்து மக்கள் உங்களை அறிந்துகொள்வார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றாக எழுதுவதற்கு அறிஞர்களைப் போல சிந்தித்து, சாதாரண மக்களைப்போல வெளிப்படுத்து - அரிஸ்டாட்டில்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் பார்ப்பதை, உணர்வதை என்னால் முடிந்தவரை மிகச்சிறந்த, மிக எளிய முறையில் எழுதுவதே எனது குறிக்கோள் - எர்னஸ்ட் ஹமிங்வே
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கதை மாந்தனுடன் எழுத ஆரம்பிக்கிறேன். அவன் உருப்பெற்று, நின்று, நடக்கத் தொடங்கியதும் நான் செய்வதெல்லாம் பேப்பர் பென்சிலுடன் அவன் கூடவே ஓடி, அவன் செய்வதையும் சொல்வதையும் படி எடுக்கிறேன். அவ்வளவுதான் - வில்லியம் பாக்னர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment