Sunday 10 May 2015

அம்மாக்களுக்கு சமர்ப்பணம்



















இந்த அம்மாக்கள் 
தோசைக்கல்லில் 
நிலவு வார்ப்பவர்கள் !

*
அப்பா கட்டிய 
வீடாயிருந்தாலும் 
அது எமக்கு 
அம்மா வீடுதான் !

*
அடுப்படியே 
அம்மாவின் 
அலுவலகம்! 
அன்பு மட்டுமே 
எதிர்பார்க்கும் சம்பளம் !
*
பிள்ளைகள் 
வெளியூரில் 
பணியிலிருக்கும் 
ஒரு வீட்டில், 
பக்கத்துவீட்டுக் குழந்தைகள் 
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் !

*
அப்பா வாசம் 
வெயில் வாசம் ! 
அம்மா வாசம் 
நிலா வாசம் ! 
எமது 
சமையலறையெங்கும் 
நிலா வாசம் !

*
எமக்குக் 
காய்ச்சல் வந்தால் 
மருந்து தேவையில்லை ! 
அடிக்கடி வந்து 
தொட்டுப்பார்க்கும் 
அம்மாவின் கையே 
போதுமானது !

*
இவ்வளவு வயதாகியும் 
புதுச்சட்டைக்கு 
மஞ்சள் வைத்து 
வருபவனைக் 
கேலி செய்யும் 
நண்பர்களே 
அது, 
அவன் வைத்த 
மஞ்சள் அல்ல ! 
அவன், 
அம்மா வைத்த 
மஞ்சள் !

*
பிள்ளைகள் 
ஊரிலிருந்து 
கொண்டு வரும் 
பயணப்பையில் 
இந்த அம்மாக்கள் 
எதிர்பார்ப்பது 
இன்னுங்கொஞ்சம் 
அழுக்குத்துணிகளை !

*

மகனுக்கான 
அப்பாவின் 
கோபத்திற்கெல்லாம் 
அம்மாவின் 
முதுகுதான் 
கிழக்கு !

*
டைப்பாய்டு வந்து 
படுத்த அம்மாவுக்கு 
சமைக்க முடியவில்லையே 
என்கிற கவலை !

*

இங்கே பலரது 
அகராதியில் 
வீடு என்கிற 
சொல்லுக்கு நேரே 
அம்மா என்று 
உள்ளது !

*
புகைவண்டியில் 
பிதுங்கி வழியும் 
பெருங்கூட்டத்தில் 
ஊர் போய்ச்சேர 
ஒற்றைக்காலில் 
நின்றுகொண்டு 
எட்டு மணிநேரம் 
ஒருவன் 
பயணிக்க முடிவதன் 
மூன்றெழுத்துக் காரணம், 
அம்மா !

*
அம்மா தாயே 
என்று 
முதன் முதலில் 
பிச்சை கேட்டவன் 
உளவியல் மேதைகளுக்கெல்லாம் 
ஆசான் !

*
எந்தப் பொய் 
சொல்லியும் 
அம்மாக்களை 
ஏமாற்றிவிடமுடியும் 
சாப்பிட்டு விட்டேன் 
என்கிற 
அந்த ஒரு பொய்யைத்தவிர !

*
அத்தி பூத்தாற்போல 
அப்பனும் 
மகனும் 
பேசிச்சிரித்தால் 
விழாத தூசிக்கு 
கண்கள் தேய்த்துக்கொண்டே 
அப்பால் நகர்கிறார்கள் 
அம்மாக்கள் !

*

வெளியூர் செல்லும் 
பிள்ளைகளின் 
பயணப்பைக்குள் 
பிரியங்களைத் 
திணித்து வைப்பவர்கள் 
இந்த அம்மாக்கள் !

*

பீஸ் கட்ட 
பணமென்றால் 
பிள்ளைகள் 
அம்மாவைத்தான் 
நாடுகின்றன ........ 
காரணம், 
எப்படியும் 
வாங்கிக் கொடுத்துவிடுவாள் ! 
அல்லது 
எடுத்துக் கொடுத்துவிட்டு 
திட்டு வாங்கிக்கொள்வாள் !

*
வீட்டுக்குள் 
அப்பாவும் 
இருந்தாலும் 
அம்மா என்றுதான் 
கதவு தட்டுகிறோம் !

*
அம்மாக்களைப் 
பற்றி 
எழுதப்பட்ட 
எல்லா 
கவிதைகளிலும் 
குறைந்தபட்சம் 
இரண்டு சொட்டுக்கண்ணீர் 
ஈரம் உலராமல் !

*

அகில உலக 
அம்மாக்களின் 
தேசிய முழக்கம் 
இதுதான் 
" எம்புள்ள 
பசி தாங்காது! "


(வாட்ஸ் ஆப்பில் வந்த கவிதை ) 


No comments:

Post a Comment