Monday 25 May 2015

தானம் தாமதமாவதால் தவிக்கும் உயிர்கள் .


இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் பேர், சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். மூளைச் சாவு அடைந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே தானமாக கிடைக்கிறது. உரிய நேரத்தில் சிறுநீரகம் கிடைக்காமலும், டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) பலன் அளிக்காததாலும் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. 

தமிழகத்திலும் சிறுநீரக பாதிப்புகள் அதிகம். மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டத்தில் சிறுநீரகம் வேண்டி கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் முதல் 4,704 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானம் செய்வதில், நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. ஆனாலும், உறுப்புகள் பற்றாக்குறை அதிகமாகவே இருக்கிறது. மூளைச்சாவு உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், , மூளைச்சாவை உறுதி செய்து டாக்டர்கள் சான்று அளிக்க தயக்கம் காட்டுவதால், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற முடியாமல் போகிறது. இதுவே, உடல் உறுப்புகள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 160 சிறுநீரகங்கள் தானமாக கிடைக்கிறது. 2008-ம் ஆண்டு அக்டோபர் முதல் கடந்த ஏப்ரல் வரை மூளைச்சாவு அடைந்த 620 பேரிடம் இருந்து 1,113 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

சிறுநீரகங்கள் செயலிழந்த ஒருவர், 3 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து டயாலிசிஸ் செய்துகொள்வது கடினம். அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் சிறுநீரகம் கிடைக்காததால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. 

சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் சிறுநீரகம் பொருத்தப்படுகிறது. தவிர நெருங்கிய ரத்த சொந்தங்கள், சிறுநீரகத்தை தானமாக கொடுக்கின்றனர். தூரத்து உறவினர்கள், நண்பர்களின் சிறுநீரக தானத்தை கமிட்டி ஏற்பதில்லை. சிறுநீரக பற்றாக்குறைக்கு இதுவும் காரணம்.

தானம் செய்ய முன்வருவோர், உண்மையான உறவினர்களா, நண்பர்களா என்பதை கமிட்டி விசாரித்து அவர்களது சிறுநீரகத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

சிறுநீரகங்கள் செயலிழப்புக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் (பிபி) போன்றவையே முக்கிய காரணங்கள். பரம்பரையாக சிறுநீரக பாதிப்பு, அதிகமாக மாத்திரை, மருந்துகளை உட்கொள்வதாலும் சிறுநீரகம் செயலிழக்கிறது. சிறுநீர் வெளியேறுவது குறைதல், ரத்தம் வெளியேறுதல், முகம், கை, கால்களில் வீக்கம் போன்றவை முக்கிய அறிகுறிகள். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அறிகுறிகள் தெரியாது. எனவே, அடிக்கடி சிறுநீரக பரிசோதனைகள் அவசியம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

No comments:

Post a Comment