Monday 3 July 2017

முத்துக்கதை - 1

                                அன்பு இருக்கும் இடத்தில்..

            ஒரு வீட்டின் வாசல் அருகே மூன்று முதியவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது, அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பெண், அவர்களைப் பார்த்து,  
நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. வீட்டிற்குள் வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள்என்றாள்

            அதற்கு அவர்கள், “வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள்.

            “இல்லை வெளியே போயிருக்கிறார் என்றாள் அந்த பெண்.


            “உன் கணவன் வந்தால்தான் நாங்கள் வீட்டிற்குள் வருவோம்” என்று முதியவர்கள் சாப்பிட வர மறுத்துவிட்டார்கள்.

            மாலையில் கணவன் வீட்டிற்கு வந்ததும், அந்த பெண் நடந்ததை கூறினாள்.

            “நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்து வாஎன்றான் கணவன்.  

            அவள் வெளியே வந்து முதியவர்கள் மூன்று பேரையும் அழைக்கிறாள். அதற்கு அவர்கள். நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாதுஎன்று சொன்னார்கள்.

            “ஏன் அப்படி?” என்று அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து. இவர் செல்வம், மற்றொருவரை காண்பித்து. இவர் வெற்றி” , “நான் அன்புஎன்று கூறி, உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல்என்று அவளிடம் கூறினார்.

            அந்த பெண் கணவனிடம் வந்து முதியவர் கூறிய அனைத்தையும் தெரிவித்தாள். அதைக் கேட்ட கணவன், மகிழ்ந்து, நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார்” என்று கூறினான்.

            மனைவியோ, நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கலாமே”  என்றாள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா?” என்றாள்.

            மகளின் ஆசைப்படி அன்பை வீட்டிற்கு அழைக்க கணவனும், மனைவியும் முடிவு செய்கின்றனர். அதன்படி, மனைவி, வீட்டிற்கு வெளியே வந்து, முதியவர்களைப் பார்த்து,  உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வரவேண்டும்”  என்றாள்.

            அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த பெண், மற்ற இருவரிடமும் “ஏன் நீங்கள் வருகிறீர்கள்? நான் அன்பை மட்டும் தானே அழைத்தேன் ? என்றாள்.  

            அதற்கு அம்மூவரும் ஒன்றாக, நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும்” என்று பதிலளித்தார்கள்.




1 comment:

  1. உண்மைதான் நண்பரே.
    நன்றி.

    ReplyDelete