Sunday 19 April 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 7

சிறந்த 25 பொன்மொழிகள்


1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்தபிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம்வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
3. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
4. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
6. நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
7. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம்இருக்கிறது என்பதே முக்கியம்.
10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
12.ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.ஒன்று காலம், இன்னொன்று மௌனம்.
15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
16. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்று சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும். 
19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
23. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்குகண்டிப்பாக கிடைத்தே தீரும்.
24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
25.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

*

மின்னணு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியானது, புரிந்து பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு ஆதாயமாகவும், அஜாக்கிரத்தையாக நடந்து கொள்கின்றவர்களுக்கு விபரீதமாகவும் அமைந்து விடுகின்றது 
வாட்ஸ் ஆப் வந்து பார்.

*


ரீமிக்ஸ் கவிதை  - (வைரமுத்து குரலில் படிக்கவும்)

வாட்ஸ் ஆப்  வந்துபார்

உன்னைச் சுற்றி நோடிபிகேஷன் சத்தம் ஒலிக்கும் ராத்திரியின் நீளம் விளங்கும் உனக்கும் கவிதை வரும் 
கண்ணுக்கடியில் கருவளையம் தோன்றும்
குரூப்பில் சேர்த்துவிடுபவன் எமனாவான்
செல்ஃபி போட்டே நண்பன் கொல்வான்
லாஸ்ட் சீன் என்பது மரணவாக்குமூலமாகும் 
பன்னி குட்டியை படம் எடுத்து போட்டோகிராபி என்பாய் 
போன் அடிக்கடி சார்ஜ் இழக்கும் 
அட்மின் கசாப்பு கடை ஆடாகி அடிபடுவான் 
ஸ்மைலி மட்டுமே போடுபவன் மேல் கொலைவெறி தோன்றும் 
நம்மை கலாய்க்கும்போது மட்டும் எல்லாம் ஆன்லைனில் அலைவார்கள் 
சிங்கில் டிக்கிற்க்கும் டபுள் டிக்கிற்க்கும் நடுவில் மாட்டி சிக்கிதவிப்பாய் 
3ஜி சிக்னல் தெய்வமாய் தெரியும்   , ஓசி வை-பை மேல் ஆசை பிறக்கும்.
போன் ஹேங் ஆகி கடுபேற்றும், ஹிஸ்டா¤ டெலிட் என்பது மகிழ்ச்சிதரும்  .
டி.பி.-யையும், ஸ்டேட்டசையும் டெய்லி மாற்றாவிட்டால் மண்டைவெடிக்கும் 
இருக்கும் 9 குரூப்பிலும் ஒரே மெசேஜை பார்வேர்ட் பண்ண தோன்றும் ,
தனிமையை உணர்ந்தாலும் நண்பர்கள் குரூப்பில் வந்து கும்மி அடிப்பார்கள்  
தனியாய் சிரிப்பது பழகிபோகும்,குரூப்புக்கு ஒரு உத்தமன் அட்வைஸ் செய்வான்.
இரண்டு மணிநேரம் வராவிட்டாலும் 400 அன்ரீட் மெசேஸ்கள் வந்து பயமுறுத்தும்.
வாட்ஸ் ஆப் வந்து பார்.    


பெற்றோர்களின் கவனத்திற்கு:


1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch"   எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
2. மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.
5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!
6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.
7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்
8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.
9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!
10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.
11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!
12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!
15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.
16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!
17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.
18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!
19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.
20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"
21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.
22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!
23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!
25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல


2050-ம் ஆண்டில் தண்ணீர் - ஒரு சிறிய கற்பனை..

(தொலைக்காட்சியில் செய்தியில் ) 

இன்றைய முக்கிய செய்திகள்
ஈரோடு அருகே வீட்டில் பூட்டி வைத்திருந்த மூன்று குடம் தண்ணீர் திருட்டு போலீஸ் வலை வீச்சு .

மூன்று வயது குழந்தையை எல்.கே.ஜி.யில் சேர்க்க இரண்டு குடம் தண்ணீர் நன்கொடையாக கேட்ட பள்ளி உரிமையாளர் கைது.

கணவனுக்கு தெரியாமல் வீட்டில் வைத்திருந்த 4 குடம் தண்ணீரை எடுத்துக்கொண்டு மனைவி கள்ளக்காதலுடன் ஓட்டம் .கணவன் 4 குடம் தண்ணீரை கண்டு பிடித்து தருமாறு போலீசீல் புகார் 

இரண்டு குடம் தண்ணீர் கொடுத்தால் ஒரே வருடத்தில் 50 குடம் தண்ணீர் தருவதாக தண்ணீர் மோசடி கும்பல் கைவரிசை.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேசன்கடையில் 3 குடம் தண்ணீர் தருவதாக எதிர்கட்சிகள் வாக்குறுதி.

பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட். மூலம் கடத்தி சென்ற 20,000 லிட்டர் தண்ணீரை விண்வெளி காவல்துறையினர் பறிமுதல்செய்தனர் 

உலக தண்ணீர் வங்கியில் இருந்து இந்தியா 50 கோடி லிட்டர் தண்ணீர் கடன் வாங்கியது. பொது மக்கள் அனைவரும் மாதம் ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும். இரண்டு சொம்பு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று புதிய சட்டம் அமல்படுத்தியது. மீறினால் இரண்டு சொம்பு தண்ணீரும் பறிமுதல் செய்யும்.

உலக தண்ணீர் வேர்ல்ட் கப் கிரிக்கெட்டில் இந்தியா தண்ணீர் கோப்பையை வென்றது 

⛲ இன்றைய தண்ணீர் விலை நிலவரம்..
கிணற்று நீர் ஒரு லிட்டர் 5000 ரூபாய்க்கும் 
ஆற்று நீர் ஒரு லிட்டர் 10,000 ரூபாய்க்கும்
சுத்திகரிக்கப்பட்ட நீர் ஓரு லிட்டர் 15,000 ரூபாய்க்கும் விற்கபடுகின்றன.

( மரங்களை வெட்டி, காடுகளை பாலைவனமாக்கி, விளைநிலங்களை விலை நிலங்களாக மாத்தி, ஆறு, ஏ£¤, குளம், குட்டைகளை ஆக்ரமித்து வீடுகள் கட்டினால், இந்த கற்பனை நிஜமாகவும் வாய்ப்பு இருக்கு. மக்களே முடிஞ்சா மழை நீரையாவது சேமிங்க. ) 


அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட் விளையாட சொல்லி கொடுக்காம விவசாயம் பண்ண சொல்லி குடுங்க ! ஸ்கோரை விட சோறு முக்கியம் !
அஞ்சப்பர் ஹோட்டலுக்கு முன்னாடி போன கோழியும், அனுஷ்கா சர்மா பின்னாடி போன கோலியும், அவுட் தான்!

*

கதையும், கருத்தும் 

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம்வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.
ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன் ! மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் - “ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள் காணும் - உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர். வாரக்கடைசி - டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும் ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள் அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி கீழே தன் கையெழுத்தையும் போட்டு, மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.
மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்து படிக்கிறார்கள். 10 நிமிடங்கள் - வகுப்பறையே சந்தோஷக்கடலில் மிதக்கிறது.
“நான் இவ்வளவு சிறப்பானவனா..? என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” - அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !
அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குணாதிசயங்களை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன. அந்த வகுப்பில் படித்த மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து, மரணம் அடைகிறான்.
அவன் உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது. இறுதிச் சடங்கில், கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார். மிடுக்கான ராணுவ உடையில் - நாட்டின் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார். ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார். பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார். உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள் அருகிலேயே நின்றிருந்தனர்.
ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார். பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் - எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்” சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத் தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.
அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர். அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் - “டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும். இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.
அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக - பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள். ஆமாம் - பல வருடங்களுக்கு முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் - “ரொம்ப நன்றி டீச்சர் - உங்கள் கடிதத்தை அவன் உயிரையும்விட மேலாக விரும்பினான். இத்தனை வருடங்களும் அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான். அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும், பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.” டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து கதறி அழுகின்றனர்..,
ஆம்,என் இனிய நண்பர்களே., இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது. எங்கே துவங்கும் - எப்படி இருக்கும் -எப்போது, எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது. இருக்கின்ற காலத்தில் - நம்முடன் இருப்பவர்களை அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.
நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம். ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால், நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக, அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம். ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை - அநேகமாக - நாம் வெளிப்படையாக பாராட்டத்தவறி விடுகிறோம். கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் தெரிவதில்லை.
சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல் நன்றாக இருக்கும்போது - பாராட்டுவது இல்லை ! பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை ! இந்த உலகில் அனைத்து உயிர்களுமே, பாராட்டுதலை எதிர்பார்க்கிறது. கிடைத்தால் சந்தோஷப்படுகிறது ! நீங்களோ, நானோ - யாருமே அதற்கு விதிவிலக்கல்ல. வெளிப்படையான பாராட்டுதல் - அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும். நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும். தோழமை உணர்வு அதிகப்பட உதவும். மனிதர்களை மேலும் நல்லவர்களாக உருவாக்க இது உதவும்..



அர்த்தங்கள்

பாத்ரூமில் நின்று மனைவி " என்னங்க " என்று அழைத்தால் பல்லி அடிக்க அழைக்கிறாள் என்று அர்த்தம்
சாப்பிடும் ஹோட்டலில் " என்னங்க " என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம்.
வீட்டு வாசலில் நின்று யாருடனாவது கைகட்டி நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது
வீட்டின் உள்ளில் இருந்து " என்னங்க " என்று உச்சஸ்தாயியில் சத்தம் வந்தால் கையைகட்டி நின்று பேசாதே என்று அர்த்தம்.
கல்யாண வீட்டு கூட்டத்தில் "என்னங்க " என்று சத்தம் வந்தால் எனக்கு தெரிந்தவர் வந்திருக்கிறார் அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என்று அர்த்தம்
துணிக்கடையில் நின்று " என்னங்க " என்று அழைத்தால் அவள் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம் 
வண்டியில் செல்லும் போது " என்னங்க " என்றால் பூக்கடை அவள் கண்ணில் பட்டதென்று அர்த்தம்.
மருத்துவமனை சென்று " என்னங்க " என்று அழைத்தால் டாக்டரிடம் என்ன பேசவேண்டும் என்று கேட்கிறாள் என்று அர்த்தம்.
வெளியே எட்டி பார்த்தவண்ணம் " என்னங்க " என்று அழைத்தால் யாரோ அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம். 
பீரோவின் முன் நின்று " என்னங்க " என்று அழைத்தால் பர்ஸுக்கு வேட்டு வைக்கிறாள் என்று அர்த்தம்.
சாப்பாட்டை எடுத்து வைத்து " என்னங்க " என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தால் இப்போ சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம் ........
இன்னும் உண்டு நிறைய பொருள்படும் " என்னங்க " எனும் சொல்..

# ரொம்ப அனுபவசாலியா இருப்பாரோ? 




No comments:

Post a Comment