Sunday 8 October 2017

குட்டிக்கதை

குரங்கு மனம் 

   ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான். உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி. அங்கே ஒரு பெரிய மனித குரங்கு உட்கார்ந்திருந்தது.
    நடுநடுங்கிய மனிதன் அந்த மனித குரங்கிடம் அடைக்கலம் கேட்டான். அந்த குரங்கு, “கவலை படாதே நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன். என்னை அண்டி வந்த உனக்கு பாதுகாப்பு தருவேன் என்றது.

   இரவு பொழுதும் வந்தது. புலியோ மரத்தின் கீழே பசியோடு இருந்தது.  ஆனால், இடத்தை விட்டு நகர்வதாக இல்லை. மனிதனும் குரங்கும் மரத்தின் மேலேயே மாறி மாறி உறங்க முடிவு செய்தனர். மனிதன் தூங்கிய போது குரங்கு காவல் காத்தது. குரங்கு தூங்கும் போது மனிதன் காவல் காத்தான்.

   அவர்களை பிரித்தாலன்றி நமக்கு உணவு கிடைக்காது என்று எண்ணிய புலி மனிதனிடம்,  குரங்கு இப்போது தூங்குகிறது நீ அதை பிடித்து கீழே தள்ளிவிடு, எனக்கு வேண்டியது பசிக்கு இரை, உன்னை விட்டுவிடுகிறேன்என்றது.

  குரங்கை தள்ளிவிட்டுவிட்டால், நாம் தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணிய மனிதன், பிடித்து குரங்கை கீழே தள்ளிவிட்டான். ஆனால் புலியோ  குரங்கிடம், எனக்கு மனித மாமிசம் தான் வேண்டும், உனக்கு மனிதனின் இயல்பை புரிய வைக்கவே இப்படி செய்தேன் இப்போதும் உன்னை விட்டு விடுகிறேன், நீ மேலே சென்று மனிதனை கீழே தள்ளிவிடு நான் பசியாற மனித மாமிசம் உண்டுவிட்டு போய்விடுகிறேன்என்றது.

   அப்படியே செய்வதாக சொல்லிவிட்டு மரத்தின் மேலே ஏறி வந்த குரங்கு மனிதனின் அருகில் வந்தது. மனிதனோ பயத்தால் நடுங்கினான்.
குரங்கோ பயப்படாதே மனிதா என்னை நம்பி அடைக்கலம் என்று வந்த உன்னை எப்போதும் காப்பேன்.  புலியிடமிருந்து தப்பிக்கவே நான் உன்னை கீழே தள்ளுவதற்கு ஒப்புக்கொண்டதாக நடித்தேன்.  நீ கவலை இல்லாமல் இருக்கலாம்.என்றது.

  குரங்குக்கு துரோகம் இழைத்த மனிதன் வெட்கி தலைகுனிந்தான்.


No comments:

Post a Comment