Monday 23 February 2015

தெரியுமா இவரை 2 - ஹென்றி ஃபோர்டு

நல்ல வேலை, சொந்த வீடு பின்னர் ஒரு கார் இது சராசரி மக்களின் அதிகபட்ச கனவு. கார் என்ற சொன்னதும் நினைவுக்கு வருபவர் ஹென்றி ஃபோர்டு. அமெரிக்காவில் கார் உற்பத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கி, தன்னுடைய பெயரிலேயே கார்களை உலகுக்குத் தந்தவர். போக்குவரத்து துறையில் பெரும் புரட்சியை உருவாக்கி, பெரும் தொழிலதிபராக வளர்ந்தவர் ஹென்றி ஃபோர்டு. 

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் வசதியான குடும்பத்தில் ஹென்றி ஃபோர்ட் 1863 ஆம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி பிறந்தார். ஆறு பிள்ளைகளில் இவர் மூத்தவர். சிறுவனாக இருந்தப்போது, தங்களது சொந்த  பண்ணையில் பணிபுரிந்துகொண்டிருந்தார். ஆனால், அந்த வேலை அவருக்கு சலிப்பைத் தர, தனது 16 வது வயதில் ஃபோர்ட் குடும்பத்தை பிரிந்து, டெட்ராய்ட் நகரத்தில் ஒரு கனரக தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 

மூன்றாண்டுகளுக்குப் பின்னர், அவர் மீண்டும் மெக்சிகனுக்கு திரும்பினார்.  அந்த காலக்கட்டத்தில், புழக்கத்தில் இருந்த நீராவி இயந்திரங்களின் மேல் அவரது கவனம் திரும்பியது. அந்த இயந்திரங்களை இயக்குவதிலும், அதை கழற்றி ரிப்பேர் செய்வதிலும் ஆர்வமாக இருந்த போர்டு, பண்ணை வேலைகளுக்குப் பயன்படும் விதமாக, எரிவாயுவில் இயங்கும் சில இயந்திரங்களையும் உருவாக்கினார். 

தனது 30-வது வயத்தில், சிக்காக்கோவில் நடைபெற்ற ஒரு இயந்திரக் கண்காட்சிக்குச் சென்ற போர்டு, அங்கே பெட்ரோலில் இயங்கும் தண்ணீர் பம்ப் ஒன்றைப் பார்த்தார். அதைப் பார்த்ததும், இதை ஏன் வாகனத்தில் பொருத்திப் பார்க்கக் கூடாது என்று அவருக்கு யோசனை தோன்றியது. அதை செயல்படுத்தியும் பார்த்தார். 

அடுத்த இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்த அவர், 1896-ம் ஆண்டு மே மாதம், பழைய உலோகங்களையும், உதிரி பாகங்களையும் கொண்டு தனது வாகனத்தை வடிவமைத்தார். சைக்கிள் மாதிரியான தோற்றத்தில், நான்கு சக்கரங்களும், ஒரு இருக்கையும் கொண்டதாக இந்த வாகனம் இருந்தது. பிரேக் இல்லாத அந்த வண்டிக்கு குவாட்ரி சைக்கிள் என்று பெயரிட்டார். 

பின்னர், ஃபோர்டு, 1903 ஆம் ஆண்டு மெச்சிகனில் ஃபோர்டு மோட்டார் கம்பெனியை தொடங்கி, மாடல் டி  என்ற  காரை உருவாக்கினார். செல்வந்தர்கள் மட்டுமின்றி சாமானிய மக்களும் கார்களை பயன்படுத்த வேண்டும் என குறைந்த செலவில் கார்களை உருவாக்கினார். அவர் உருவக்கிய மாடல் டி காரின் அப்போதைய விலை வெறும் 500 டாலர்கள் மட்டுமே. அவரது தயாரிப்புகளை மக்கள் போட்டி போட்டு வாங்க, பதினெட்டு ஆண்டுகளில் 15 மில்லியன் கார்களை விற்பனை செய்து ஃபோர்டு நிறுவனம் சாதனை படைத்தது.  

உலகத்தின் மிகப்பெரிய தொழிலதிபராக உயர,  அவரது தயாரிப்புகள் மட்டுமில்லாமல், தனது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்களை நடத்தின விதமும் காரணமாக அமைந்தது. ஊதியத்தை உயர்த்தி வேலை நேரத்தை குறைத்தார். 9 மணிநேரம் வேலை, இரண்டு டாலர் 34 காசு சம்பளம் என்ற முறையை மாற்றினார். 

குறைந்தபட்ச ஊதியம் 5 டாலர்களாகவும், 8 மணி நேரம் வேலை நேரமாகவும் மாற்றினார் போர்டு. அதுமட்டுமில்லாமல்,'டிசன் இன்ஸ்டட்டியூட்' என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூக நல பணிகளுக்காக தன்னோட சொத்துக்களின் பெரும்பங்கை செலவழித்தார். 

1943 ஆம் ஆண்டு எதிர்பாரத விதமாக அவரோட மகன் எட்சல் இறந்து போனதால் தானே ஃபோர்டு நிறுவனத்தோட தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி ஃபோர்டு தன்னோட 84 வயதில் காலமானபோது 'ஃபோர்ட் பவுண்டேஷன்' எனப்படும் உலகின் மிகப்பெரிய அற நிறுவனத்தை விட்டுச் சென்றார். 

No comments:

Post a Comment