Thursday 26 February 2015

பன்றிக்காய்ச்சல் - தடுப்பு முறைகள்

உலகை அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930 - ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் கண்டுபிடிக்கப்பட்டது.. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. பின்னர் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. பன்றிகளிடமிருந்து இந்த காய்ச்சல் பரவியதால் இது, பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
தற்போது பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு இந்த காய்ச்சல் பரவுவதில்லை. 'எச்1என்1 - இன்ஃப்ளுயன்சா வைரஸ்' கிருமிகளால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் 5 நாட்களில் காய்ச்சல் குணமாகிவிடும்.
பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில்  சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சுய மருத்துவத்தை அறவே தவிர்க்க வேண்டும்..
பன்றிக்காய்ச்சல் வீரியம் குறைந்து சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என்ற நிலையில் இருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு பன்றிக்காய்ச்சலை கொடிய நோய் என்று அறிவித்த உலக சுகாதார நிறுவனம், பருவ காலங்களில் காணப்படும் சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என அறிவித்துவிட்டது.
அறிகுறிகள்:
காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, மயக்கம், சளியில் ரத்தம், சர்க்கரை நோய் அதிகமாகுதல், விரல்கள் நீல நிறமாக மாறுதல் போன்றவைகள் பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள்.
எப்படி பரவுகிறது?
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும் போதும் வெளியே வரும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்தக் கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை, குளிர்சாதன பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை மற்றவர்கள் தொடும்போது, அவர்களின் கைகளில் கிருமி ஒட்டிக் கொள்கிறது. அதன்பின் அவர்கள்  கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடும்போது  கிருமி தொற்று ஏற்படுகிறது. இந்த வைரஸ் கிருமிகள் குளிர்ந்த இடங்களில் இரண்டு நாட்கள் வரை உயிருடன் இருக்கும். மற்ற இடங்களில் பல மணி நேரத்திற்கு வைரஸ் கிருமிகள் உயிருடன் காணப்படும்.
தடுக்கும் முறைகள்:
வீட்டில் இருந்து பள்ளி, அலுவலகம் சென்றவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பிய உடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை கழுவ வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவினால் மிகவும் நல்லது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் விலகி  இருப்பது நல்லது.
பன்றிக்காய்ச்சல் 80 சதவீதம் கைகளை சுத்தமாக கழுவதாததால் தான் பரவுகிறது. கைகளை சுத்தமாக வைத்திருநத்தலே சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
பேருந்து, ரயில்களில் பயணிப்பவர்கள் மற்றும் திரையரங்கம், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் முக கவசங்கங்களை (மாஸ்க்) அணிந்து செல்ல வேண்டும்.
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். இந்த கைக்குட்டை மற்றும் துணிகளை நன்றாக துவைத்து வெயிலில் காயவைத்து பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.


No comments:

Post a Comment